ETV Bharat / state

இந்தியா கூட்டணி ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது: உதயநிதி ஸ்டாலின் உறுதி! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 10:54 AM IST

Etv Bharat
Etv Bharat

Udhayanidhi Campaign: ஈரோட்டில் நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கள்ள உறவு உள்ளது. மோடி அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட வெல்லாது என விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்: அப்போது அவர் பேசியதாவது, “நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தேன். உங்களை பார்த்தபோது இந்த முறை குறைந்தது 3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி. எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். கழகத்தில் பல அணிகள் உள்ள நிலையில் ஆ ராசாவை இளைஞரணிக்கு பொறுப்பாளராக போடவேண்டும் என திமுக தலைவரிடம் நான் சொன்னேன்.

வடை சுட்டுள்ளார்கள்: 2 ஜி பொய் வழக்கில் நீதிமன்றத்தில் தனிமனிதனாக நின்று வாதாடி வெற்றி பெற்றவர் ஆ.ராசா. தாளவாடி மலைப்பகுதியில் 13 கோடி ரூபாய் செலவில் அரசு கலைக்கல்லூரி, ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு மணி மண்டபம் வர காரணமாக இருந்தவர் ஆ.ராசா. சமையல் கேஸ் விலையை ஏற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் 100 ரூபாய் குறைத்து வடை சுட்டுள்ளார்கள்.

வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார்: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் விலை 65 ரூபாய்க்கும், கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் விற்கப்படும் என தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஏனென்றால் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் பவானிசாகர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மோடிக்கு வைங்க வேட்டு: மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய நகரங்களுக்கு அகல ரயில்பாதை வழித்தடம் அமைக்கப்படும். தாளவாடி மலைப்பகுதிக்கு வனப்பகுதி வழியாக கர்நாடகத்திற்கு செல்லாமல் தமிழகம் வழியாக செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொன்னதைச் செய்வார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதனால போடுங்க பட்டனை அழுத்தி ஓட்டு. மோடிக்கு வைங்க வேட்டு. மிக்ஜாம் புயலில் அனைத்து அமைச்சர்களும் களத்தில் நின்றனர்.

11,000 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: பிரதமர் வந்து பார்த்தாரா?. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுக அரசு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. பெண்கள் கல்லூரியில் படிக்க கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாதாமாதம் 11 ஆயிரம் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம் இந்தியாவில் முதன்முறையாக கொண்டு வந்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நமக்கு 29 பைசா: ஈரோடு மாவட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மாதாமாதம் 4 இலட்சம் மகளிர் பயன்பெறுகிறார்கள். இன்னும் 4 மாதத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். மத்திய அரசுக்கு 1 ரூபாய் கொடுத்தால் திருப்பி தருவது வெறும் 29 பைசா தான். உத்திபிரதேச மாநிலம் 1 ரூபாய் கொடுத்தால் 3 ரூபாய், பீகாருக்கு 7 ரூபாய், நமக்கு 29 பைசா.

நீட்-க்கு அனுமதி அளித்தது அடிமை அரசு: எவன் அப்பன் வீட்டு காசு. யாருக்கு கொடுக்கிறார்கள். போன தடவை கோ பேக் மோடி (Go Back Modi). இந்த முறை கெட் அவுட் மோடி (Get Out Modi). வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து மருத்துவம் பார்க்கிறார்கள். நீட் தேர்வை ஜெயலலிதா இருக்கும் வரை கொண்டு வரவில்லை. அதற்குப் பிறகு வந்த அடிமை அரசு (எடப்பாடி பழனிச்சாமி) நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது. இதனால் அனிதா உள்ளிட்ட பலரை இழந்துள்ளோம்.

நீட் தேர்வில் இருந்து விலக்களிப்போம்: இந்த நீட் தேர்வு நமக்கு தேவையா?. இதற்கு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்போம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் மோடி தமிழகத்திற்கு வருகிறார். பாதம் தாங்கி பழனிச்சாமி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பேசினார். நான் அங்கு சென்று பார்த்தபோது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது. இதைக் கூறினால் பழனிச்சாமிக்கு ஏன் கோபம் வருகிறது?.

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள உறவு: அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கள்ள உறவு. மோடி அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட வெல்லாது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. திமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஜுன் 3ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள்.

கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசு: அதற்கு அடுத்த நாள், வாக்கு எண்ணிக்கையின் போது 40 தொகுதிகளில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் உதயசூரியனுக்கு வாக்களிக்க பாசத்தோடு, உரிமையோடு ஸ்டாலினின் மகனாக, கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன். அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று பேசினார்.

இதையும் படிங்க: "திமுக மீதான அதிருப்தி அலை.. பாஜகவுக்கு சாதகமான சூழலாக மாறுகிறது"- பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.