ETV Bharat / state

ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.. எச்சரிக்கை விடுத்த தூத்துக்குடி எஸ்.பி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 6:27 PM IST

Dangerous Adventures
Dangerous Adventures

Thoothukudi boys fire dive reels: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் சாகசம் செய்வதாகக் கூறி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களைச் செய்தும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள குளத்தில் பெட்ரோல் ஊற்றி, அதில் தீயிட்டு அதன்மீது குதித்தும், மணலில் குழி தோண்டி அதில் தலைகீழாக புதைத்தும் சாகசம் செய்வதாகக் கூறி, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களைச் செய்தும், அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, அந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வைரலானது.

இதனை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் கென்னடி உரிய விசாரணை மேற்கொண்டு, தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஏசுராஜசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி மற்றும் போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், தட்டார்மடம் வாழத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களான பாஸ்கர் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23), முருகன் என்பவரது மகன் சிவக்குமார் (19) மற்றும் வீரபத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகியோர் சேர்ந்து, இந்த ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களைச் செய்து வீடியோ எடுத்து, அதை தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 277 (தண்ணீரை மாசுபடுத்துதல்), 278 (சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல்), 430 (நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல்), 285 (பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 308 (மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல்) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், போலீசார் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபரான இசக்கிராஜா என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும், இது போன்று தேவையில்லாத சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது உண்மைக்குப் புறம்பான செய்திகள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மற்றும் வாகனங்களில் வீலிங் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, இந்த விவகாரம் தொடர்பாக தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் YouTube சேனல் நடத்தும் ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பரிகாரத்திற்காக சென்றுவிட்டு திரும்பிய இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.