ETV Bharat / state

தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 11:08 AM IST

tea
தேநீர் விவகாரம்

Dharmapuri Untouchability issue: கூலி வேலைக்காகச் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்ததாக தோட்டத்தின் உரிமையாளர்களை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டி அருகே உள்ள பாளையம்பள்ளி கிராமத்தில் இருந்து, கூலி வேலைக்காக 5 பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் மாரப்பநாயக்கன்பட்டிக்குச் சென்று உள்ளனர்.

அங்குள்ள புவனேஸ்வரன் என்பவரது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தோட்ட உரிமையாளர் இந்த 5 பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் வழங்கி உள்ளதாகவும், அதில் தோட்டத்தின் உரிமையாளர் மட்டும் சில்வர் டம்பளரில் குடித்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு கூலி வேலைக்குச் சென்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 5 பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்து அவமானப்படுத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண் செல்லி என்பவர், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் தேநீர் கொடுத்த தரணி, மாமியார்‌ சின்னதாயி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

பின்னர், விசாரணை முடிந்த பிறகு தரணி மற்றும் சின்னத்தாய் ஆகியோர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இளங்கலை நீட் நுழைவுத் தேர்விற்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்கலாம்..! மே 5ஆம் தேதி நுழைவுத் தேர்வு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.