ETV Bharat / state

‘தனித் தமிழ்நாடு’ முழக்கமிட்ட வேல்முருகன்.. தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 1:34 PM IST

Updated : Feb 14, 2024, 4:39 PM IST

TVK Leader Velmurugan speech at TN Assembly
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு

TN Assembly: சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சர்வாதிகார ஆட்சியாக மோடி ஆட்சி சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சென்னை: முதலமைச்சர் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்களும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுவதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், "பெரியார், அண்ணா எந்த மாநில உரிமைக்காக போராடினார்களோ, அந்த மாநில உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் ஒரு சர்வாதிகார தன்மையோடு, பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக உரிமையை குழி தோண்டி புதைக்கும் எண்ணத்தோடு மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டு, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் வங்கியில் இருக்கும் பணத்தை தன் கையில் எடுத்தது கடந்த கால வரலாறு.

இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்ற ஒரு சூழல் உள்ளது. இந்திய தகவல் உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்பவர்களும் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்திய நாட்டின் முப்படைத் தளபதிகளின் பதவிகளைக் காலி செய்து, முப்படைத் தளபதிகளுக்கும் ஒரே சித்தாந்தம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தலைவராக நியமிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்களுக்கு, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலே ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு, தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தின் கருத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களை இந்த நாட்டின் உச்சபட்ச பதவிகளில் அமர்த்தக் கூடிய ஒரு சூழல் உள்ளது. இன்று இந்தியா என்பது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்டு, 546-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களைக் கொண்டு ஒரு கொடையின் கீழ் ஜனநாயக மாண்புடன் சிறப்பாக உள்ளது.

இதனை அழிப்பது தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்'. இதனை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, மிகவும் மோசமான நடவடிக்கை ஆகும். மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்திய அரசு கொண்டு வந்த, மக்கள் தொகையை குறைப்பதற்கான 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற கருத்தில் தொடங்கி, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்று தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், உங்கள் மாநிலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ளது. உங்களுக்கு ஏன் இத்தனை தொகுதிகள்? அதனைக் குறைக்கிறோம். உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறோம் என்று கூறுவது மாநில அரசின் உரிமையையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உரிமையையும், குழி தோண்டி புதைக்கும் செயல்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தெய்வம், ஒரே வழிபாடு, ஒரே உணவு இதனை எதிர்த்து தமிழக முதலமைச்சர் குரல் கொடுத்து வருகிறார். எனவே இந்த தீர்மானத்தை அவர் கொண்டு வந்துள்ளார். சர்வாதிகார ஆட்சியாக மோடி ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. காந்தியின் தேசம் மாற்றப்படுகிறது. கோட்சே நாடாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதி இறக்கும் வேளையில், ஐந்தாண்டுகளுக்கு இது காலி பணியிடம் என்று அறிவிக்குமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!

Last Updated :Feb 14, 2024, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.