ETV Bharat / state

எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு: தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசு உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 10:24 PM IST

Ennore Ammonia Gas Leak
எண்ணூர் அமோனியா வாயுக் கசிவு

Ennore Ammonia Gas Leak: எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று எண்ணூரில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவுக்கான காரணத்தைக் கண்டறியத் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர், மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய சென்னை மண்டல அலுவலர், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த முதன்மை விஞ்ஞானி மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி உள்ளிட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.

இந்த தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயிலிருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது.

மிக்சாம் புயல் காரணமாகக் குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் இடமாற்றம் கொண்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் குழுவால் கணிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பின்வருமாறு தொழில்நுட்பக் குழு பரிந்துரைகள் கொடுத்துள்ளது.

1. தொழிற்சாலையில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்குப் பதில் புதிய குழாய்கள் அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

2. கடலிலிருந்து சாலை வழியாகத் தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை. இக்குழாயானது பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரியப் பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதைத் தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்.

3. முன் குளிரூட்டுதல் (Pre Cooling) மற்றும் அமோனியா வாயுவினை திரவ நிலையில் கப்பலிலிருந்து தொழிற்சாலைக்குக் கொண்டு வருவதற்கு, குழாயின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி அழுத்தச் சோதனையை இந்நிறுவனம் மேற்கொள்ள வேண்டும்.

4. குழாய் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பினை தொழிற்சாலை உறுதி செய்த பின்னரே, அமோனியா அக்குழாயின் வழியே செலுத்தப்பட வேண்டும்.

5. அமோனியா கசிவு ஏற்பட்டால் ஆலையைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் தொழிற்சாலையின் அனைத்து திசைகளிலும் மற்றும் கடற்கரையிலிருந்து சாலை வழியாக ஆலைக்குச் செல்லும் குழாய்க்கு அருகிலும் அமோனியா சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும்.

6. தொழிற்சாலை உள்ளேயும் வெளியேயும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை (Emergency Preparedness Plan) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும்.

7. அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதைத் தவிர்த்து எரிக்கப்படுவது (flare) உறுதி செய்யப்பட வேண்டும்.

8. அமோனியா வாயுக் கசிவின் தாக்கத்தைக் குறைக்க, அமோனியா செல்லும் குழாய்களில் தானியங்கி நீர் தெளிப்பான்கள் (Automated Water Curtain) அமைக்கப்பட வேண்டும்.

9. அமோனியா வாயு குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன் செயல்பாட்டினை நிறுத்துவதற்கான தானியங்கி கருவிகள் (Automated Tripping System) நிறுவப்பட வேண்டும்.

10. விபத்துகள் மற்றும் ஆலையில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளின் போது அருகிலுள்ள கிராமங்களில் மக்களை எச்சரிக்க அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி எழுப்பான்கள் தொழிற்சாலைகளால் அமைக்கப்படவேண்டும்.

11. அவசரநிலை காலங்களில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பொது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை (Do’s & Don’ts) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

12. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் அமோனியா வாயு வாசனையை உணர்ந்தால் அவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய மாதிரி பயிற்சிகளை (Mock Drill) மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் மூலம் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.

13. அமோனியா வாயுவினை கப்பலிலிருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில், தொழிற்சாலையின் 2 கி.மீ சுற்றளவில் காற்றில் அமோனியா வாயு அளவினை ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் கண்காணிப்பு செய்து தொழிற்சாலை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் இயக்குனர்-தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் அவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும்.

14. அமோனியா வாயுவினை கப்பலிலிருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில் கடல்நீரில் அமோனியா அளவினை அளவீடு செய்ய வேண்டும்.

15. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமோனியா வாயு எடுத்துச் செல்லும் குழாய் மற்றும் உரத் தொழிற்சாலையின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கையைத் தொழிற்சாலை தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

16. தொழிற்சாலை மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி (inter locking system) கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

17. அம்மோனியம் பாஸ்பேட் பொட்டாஷ் சல்பேட் (APPS) ஆலையை மறுதொடக்கம் செய்வதற்கு முன், அமோனியா சேமிப்பு கிடங்கு, அனைத்து அபாயகரமான இரசாயன சேமிப்பு தொட்டிகள் மற்றும் குழாய்களுக்குப் பாதுகாப்பு தணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தொழிற்சாலை மேற்கொள்ள வேண்டும்.

18. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமோனியா வாழ்வினை கடலுக்கு அடியில் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் உர ஆலையின் இடர் (Risk Assessment), ஆபத்து மற்றும் செயல்பாட்டு ஆய்வை (HAZOP Studies) இந்த தொழிற்சாலை அவ்வப்போது மேற்கொண்டு, ஆய்வின் பரிந்துரைகளின்படி தேவையான அனைத்து அமைப்புகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

19. அமோனியா வாயுக் கசிவு குறித்து முழுமையான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அத்தணிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

20. முகக்கவசம், தலைக்கவசம், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், இரசாயனச் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் உடைகள், சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை (PPE) தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பின்வருவனவற்றை மேற்கொள்ளவும் குழு பரிந்துரைத்துள்ளது:

  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்குச் சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • காற்று சட்டத்தின் (தடுப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு) கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளைத் தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; பிப்.12 முதல் தொடர் போராட்டம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.