ETV Bharat / state

"பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்" - அமைச்சர் ரகுபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:45 PM IST

Minister Raghupathi
அமைச்சர் ரகுபதி

Minister Raghupathi: ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் ரகுபதி பேட்டி

திருச்சி: திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்த 140 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதனையடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில் "இந்தியாவிலேயே சிறைத் துறையை நிர்வகிக்கும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சிறைவாசிகளை இல்லவாசிகளாக கருதி அவர்களுக்கு சிறப்பான உணவு, நூலகம், சிறைக்குள்ளேயே வேலை வாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

சிறையைத் தண்டிக்கும் இடமாக இல்லாமல் ஒருவரைத் திருத்தும் இடமாக இருக்க வேண்டும் என்கிற தமிழக முதலமைச்சர் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறோம். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசு அவர்களுக்கான பாஸ்போர்ட் வழங்கவில்லை. அதைப் பெற்றுத் தருவதற்கு உரிய முயற்சியை எடுத்து வருகிறோம். அரசு அவர்களை கைதியாக நடத்தவில்லை. ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறும் போக்கைத் தான் கடைப்பிடித்து வருகிறார்.

நாகை மாவட்டத்திற்குச் சென்ற ஆளுநர் அங்கு வீடுகள் கட்டுவதில் தவறு நடந்துள்ளது என பொதுவாகக் கூறுகிறார். குறிப்பிட்டு என்ன தவறு என கூறினால் அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் எடுப்போம். பாஜகவின் ஊதுகுழல் போல் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்‌.ரவி பேசி வருகிறார். அ.தி.மு.க என்கிற எதிர்க்கட்சி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகள் செயலிழந்துள்ளதால் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆளுநர் பேசி வருகிறார். எதிர்க்கட்சிகள் பலம் இழந்து விட்டதை ஆளுநரின் செயல்பாடுகள்‌ உறுதிப்படுத்துகிறது" என்று அமைச்சர் ரகுதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டா? நயினார் நாகேந்திரனுக்கு எதிராக போஸ்டர்.. நெல்லையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.