ETV Bharat / state

மகாத்மா காந்தியை கொன்றவர்களின் வழி வந்தவர் தான் ஆர்.என்.ரவி - சபாநாயகர் அப்பாவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 9:02 AM IST

Updated : Jan 25, 2024, 10:47 AM IST

tn assembly speaker Appavu slams governor rn ravi on his comment against mahatma gandhi
சபாநாயகர் அப்பாவு

Appavu Slams RN Ravi: ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசத்தந்தை மகாத்மா காந்தியைப் பற்றி கொச்சைப்படுத்திப் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அவர் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி: கோட்டைகருங்குளம் பகுதியில் உள்ள நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கான தண்ணீரை நேற்று (ஜன.24) சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு திறந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 40 குளங்களுக்குத் தினசரி 60 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.

ஒவ்வொரு கால்வாயிலும் 30 கன அடி வீதம், 68 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். குளங்களின் நீர்மட்டம் மட்டம் குறையக் குறைய அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் முறையாகக் கொடுப்பார்கள். மேலும், தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்பு வெள்ளை நீர் கால்வாயில் நீர் போக்கு குறித்து ஆய்வு செய்ய வெள்ளோட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்பொழுது அந்த தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் சந்திரபோஸ் தான் போராட்டத்தை நடத்தி சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருக்கும் போது, தான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று மூன்று முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, தன்னை விடுதலை செய்யக்கோரினார்.

மேலும், மாதம் தோறும் 67 ரூபாய் ஊதியம் பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியின் சாதனைகளை இந்தியா முழுவதும் எடுத்துரைத்து வந்தார். அவர் வழியில் வந்தவர்கள், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். அதன் தொடர்ச்சி தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள், உயர் சாதியைச் சார்ந்த 11 பேர் தான் தேசப்பிதா மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தார்கள். மகாத்மா காந்தியைப் பொறுத்தவரை அவர் தேச பக்தர் என்பதைவிட, அவர் மிகப்பெரிய ராமர் பக்தர். கையில் பகவத்கீதை வைத்திருப்பார். அதன் படி அவர் நடந்து கொள்பவர். அப்படிப்பட்ட ராமர் பக்தரையே சுட்டுக் கொன்றவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் சித்தார்ந்தவாதிகள்.

இப்பொழுது கூட அதே சித்தாந்தத்தில் உள்ள பிராக்கியா சிங் என்பவர் 2008ஆம் ஆண்டில் டிபன் பாக்ஸில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர். அதற்காகத் தண்டனை பெற்ற அவருக்கு முன் விடுதலை அளிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் போபாலில் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட வைத்து, வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசத்தந்தை கோட்சே என்று சொன்னவர். அவருடைய வழியை வந்தவர்கள் தான் ஆர்.என்.ரவி. அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்போதும் மதிப்பதில்லை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், அவர் பொது வழியில் மதச் சார்புள்ள நாடு இந்தியா எனப் பேசி வருகிறார். மகாத்மா காந்தியைக் கொச்சைப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், அவர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி செயல்பட்டால் நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க முடியாது - ஆம்னி பேருந்துகள் சங்கம் திட்டவட்டம்!

Last Updated :Jan 25, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.