ETV Bharat / state

வந்தே பாரத் ரயில்: சென்னை - நாகர்கோவில் இடையேயான சேவை நீட்டிப்பு! - southern railway train service

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 6:46 PM IST

Updated : Apr 3, 2024, 8:47 PM IST

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு

Southern Railway train service: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் இரண்டு மாதங்களுக்கும், சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை: அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை மார்ச் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஏப்ரல் 07, 14, 21, 28 மற்றும் மே 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஏப்ரல் 8, 15, 22, 29, மே 06, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்குத் திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளது.

அதேபோல் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் இயக்கப்பட்டு வந்த சென்னை, நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலின் சேவையை ஏப்ரல் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைச் சமாளிக்க மார்ச் மாதம் வரை வியாழக்கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை வியாழக்கிழமைகளில் காலை 05.15 மணிக்குப் புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில், சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) குறிப்பிடப்பட்ட அதே வியாழக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.45 மணிக்குச் சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 05.55 மணிக்குப் புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்குக் காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மர்மமான முறையில் இறந்த நபரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது மதுரை ஐக்கோர்ட்! முழு விபரம் என்ன? - Madurai High Court

Last Updated :Apr 3, 2024, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.