சென்னை: பாங்க் ஆஃப் பரோடாவின் ஓபிசி பணியாளர் சம்மேளனத்தின் சார்பில், 8வது அகில இந்திய கருத்தரங்கம் மற்றும் 30ஆம் ஆண்டு சம்மேளனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் இன்று (மே 26) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது. இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சமூக நீதி கோட்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். 6ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், சமூக நீதிக்கு ஆதரவான பக்கம் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர முடிந்துள்ளது. எனவே, இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பிரதமர் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் உரையாற்றும் கருத்துக்கள் பிரதமரின் பதட்டம் மற்றும் பயத்தைக் காட்டுகிறது. குறிப்பாக, இந்து சமூகத்தினரின் தாலிகளை பறித்து முஸ்லீம்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என கூறியதும் சரி, ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என கூறுவதும் சரி, அவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஓடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி இனவாத கருத்துக்களை பேசி வருகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி ஒடிசா மாநிலத்தில் ஏற்கத்தகாத வகையில் உள்ள கருத்துக்களை முன் வைப்பது அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முன்பதிவு பெட்டியில் போதையில் இளைஞர்கள் தகராறு.. நள்ளிரவில் வாக்குவாதம் - நடந்தது என்ன? - Drunken Youths Atrocity