ETV Bharat / state

தேர்தலுக்கு பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்காது - அண்ணாமலை பேச்சு.. - annamalai campaign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 2:13 PM IST

Annamalai Campaign
அண்ணாமலை பிரச்சாரம்

Annamalai Campaign: 2024 தேர்தலுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றும் தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பின் எடப்பாடி தலைமையிலான அதிமுக இருக்காது - அண்ணாமலை பேச்சு..

தேனி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து, தேனியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 13) பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை இருவரும், ஒரே வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்தனர்.

அப்போது பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, "2026 ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தல். தமிழகத்தை ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றுதான், தலைவர்களும் ஒன்றுதான். தொண்டர்கள் தான் வேறு.

டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இரண்டு பேரும் ஒன்றாகச் செயல்படுகின்றனர். பிரதமர் மோடியின் முழு அன்பைப் பெற்றுள்ள வேட்பாளராக டிடிவி தினகரன் இருக்கிறார். தினகரன் வெற்றி பெற்று விட்டால், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தினகரன் பற்றி விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில், அதை பற்றி எல்லாம் ஸ்டாலின் பேச மாட்டார். இந்தியாவிலேயே மத்திய அரசு அதிக வசதி ஏற்படுத்திக் கொடுத்த மாநிலம் என்றால், அது தமிழ்நாடு தான். மத்தியில் உள்ள அரசை வலியுறுத்துவதற்காகத் தான், அதிமுக இருக்கின்றது. மோடியை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விடாமல் தடுப்பதற்காகத் தான், இந்தியக் கூட்டணி இருக்கின்றது. அவர்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது.

வனவாசத்தை எல்லாம் முடித்துவிட்டு, இன்று அரசியல் களத்திற்கு மீண்டும் வந்துள்ளார் தினகரன். தினகரன் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து மறைமுகமாக வேலை செய்கின்றனர். 2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது. தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்.

அதிமுகவில், காண்ட்ராக்டர் (Contractor) மற்றும் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு மட்டுமே கட்சி நடத்தி வருகிறார், எடப்பாடி பழனிசாமி. யார் இங்கு எட்டப்பன் என்பதில், அதிமுக தொண்டர்கள் தெளிவாக உள்ளார்கள். தமிழக மக்கள், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி பிரஷரில் உள்ளனர். இந்த பிரஷரில் இருந்து மக்களை விடுவிக்க, தினகரனின் குக்கர் சின்னம் வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணம் தினகரன் தான்.

2026ல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டணி தொடரும். தமிழகத்தில் திமுக சாதனைகளைச் சொல்லி ஸ்டாலின் பேசுவதில்லை. ஏனென்றால் 33 அமைச்சர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு லஞ்சம் வாங்குகிறார்கள். ஜெயலலிதா எப்படி அரசியல் செய்தாரோ, அதே போல் தினகரன் அரசியல் செய்கிறார்" எனப் பேசினார். இந்த பிரச்சார கூட்டத்தில் ஏராளமான கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'கச்சத்தீவோடு தாரை வார்க்கப்பட்ட பாரம்பரிய மீன் பிடி உரிமை' - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன் - Lok Sabah Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.