ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்! - weather update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:55 PM IST

today weather update
today weather update

Tamil Nadu Weather: இன்று முதல் 29ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் உள்ள ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 இடங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி, வேலூரில் 41.6 டிகிரி, திருப்பத்தூரில் 41.4 டிகிரி, சேலத்தில் 41.1 டிகிரி, கரூர் பரமத்தியில் 41 டிகிரி, தர்மபுரியில் 40.7 டிகிரி, திருத்தணியில் 40.6 டிகிரி, நாமக்கல் மற்றும் திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேலும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும்மலைப் பகுதிகளில் 21 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 28 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு ஏப்.29 முதல் மே 01ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: இன்று முதல் 29 வரை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 முதல் 75 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50 முதல் 80 சதவீதமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: புதிய அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.