ETV Bharat / state

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்; நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பாதிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 12:20 PM IST

வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Revenue officers strike: காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வருவாய்த்துறை சான்றிதழ் பெறும் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது உயர் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், வருவாய்த்துறையின் மூலம் அளிக்கப்படும் சான்றிதழ்கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

10 மாதங்களுக்கு முன்னதாக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்களும் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது, மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிட வேண்டும். 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிடுதல், உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொண்டு வரும் வருவாய்த் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்குதல், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்குதல், பொதுமக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர் நியமிக்கப்பட வேண்டும்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுக்கான கால அவகாசம், நிதி ஒதுக்கீடு செய்தல், முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியத் தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிக்கையை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனவும், அனைத்து கோரிக்கைகள் மீது தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.