ETV Bharat / state

23 வகையான நாய்களுக்கு உடனே கருத்தடை செய்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு! - 23 dogs ban in tamil nadu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 5:28 PM IST

23 Dogs Ban in Tamil Nadu: தமிழகத்தில் தொடரும் நாய் கடிக்கும் சம்பவங்கள் எதிரொலியாக 23 வகையான நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் அவைகளுக்குக் கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Rottweiler, TN Secretariat Photo
Rottweiler, TN Secretariat Photo (Credits to Etv Bharat Tamil Nadu)

சென்னை: தமிழகத்தில் தொடரும் நாய் கடிக்கும் சம்பவங்கள் எதிரொலியாக 23 வகையான நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் தடை செய்யப்பட்ட நாய்களை வைத்திருப்பவர்கள் அவைகளுக்கு கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,

அதில், "06.05.2024 அன்று சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், கீழ்காணும் தகவல் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

12.03.2024 தேதியிட்ட இந்திய அரசின் மீன்வளம், கால்நடைபராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான,

  1. பிட்புல் டெரியர்
  2. தோசா இனு
  3. அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்
  4. பிலா ப்ரேசிலேரியா
  5. டோகா அர்ஜென்டினா
  6. அமெரிக்கன் புல் டாக்
  7. போயர் போயல்
  8. கன்கல்
  9. சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்
  10. காக்கேஷியன் ஷெபர்டு டாக்
  11. சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக்
  12. டோன் ஜாக்
  13. சர்ப்ளேனினேக்
  14. ஜாப்னிஸ் தோசா
  15. அகிதா மேஸ்டிப்
  16. ராட்வீலர்ஸ்
  17. டெரியர்
  18. ரொடீசியன் ரிட்ஜ்பேக்
  19. உல்ப் டாக்
  20. கேனரியோ அக்பாஸ் டாக்
  21. மாஸ்கோ கார்ட் டாக்
  22. கேன்கார்சோ
  23. பேண்டாக்

என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண்/ பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்த அழைத்து செல்ல வேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது மூக்கு நுனியில் இருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கும் பாதுகாப்பாக அமையும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை கோரி மனு; அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Ban Sticker On Vehicles Across TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.