ETV Bharat / state

"மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சென்று பொய் மூட்டைகளை அவிழ்த்துள்ளார்" - தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி! - TAMILISAI SOUNDARARAJAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 4:48 PM IST

tamilisai-soundararajan-response-mk-stalin-blames-on-puducherry-government
"மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சென்று பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார்" - தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundararajan Statement: முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி சென்று பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார் எனவும், நிறைய பொய்களைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் எனவும் சென்னை தெற்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது X சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை தெற்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது X சமூக வலைத்தளப் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதுச்சேரி சென்று பொய் மூட்டைகளை அவிழ்த்து உள்ளார். நிறைய பொய்களைச் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.

நெடுநாள் புதுச்சேரியை மாநிலத்தை ஆண்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் கூட அவர்கள் ஆட்சி தான் இருந்தது. இதற்கு முன்னாள் மத்தியில் கால் நூற்றாண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது புதுச்சேரியிலும் இவர்கள் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்போது மாநில அந்தஸ்து பற்றி ஏன் பேசவில்லை?

ஸ்டாலின் ஏதோ நேற்று கட்சி ஆரம்பித்து இன்று கட்சி நடத்திப் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். புதுச்சேரிக்குச் சென்ற உடனே ஞானோதயம் வந்து விடுகிறது. இதை ஏன் அவர்கள் செய்யவில்லை இன்று தான் புதுச்சேரிக்கு புதிதாகச் செல்கிறாரா?

15 ஆண்டுகளாக முழு நேர பட்ஜெட் போட வக்கில்லாத திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் அரசு புதுச்சேரிக்குள் நுழைந்து ஓட்டுகள் கேட்க எந்த தார்மீக உரிமையும் கிடையாது. 15 ஆண்டுகள் கழித்து 2300 கோடி அதிகமாகப் புதுவை மக்களுக்குப் பெற்றுத்தந்து முழு நேர பட்ஜெட்டை போட்டு எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது அங்கே ஆட்சி செய்யும் மரியாதைக்குரிய மோடி அவர்களின் கூட்டணி அரசு.

ரேஷன் கடைகளுக்கான பணம் மக்களுக்கு முழுவதுமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்ல மக்கள் என்ன அரிசியை விரும்புகிறார்களோ அதை வாங்கி கொடுத்து நேரடி வங்கிக் கணக்கில் மக்களுக்கான ரேஷன் பணத்தைச் செலுத்துவதில் மிகச்சிறந்த மாநில மாடலாக புதுவை இருக்கிறது. தமிழ்நாட்டில் மக்கள் சாப்பிட முடியாத அரிசியை ரேஷன் கடையில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு மக்களே பலமுறை அரிசியைத் தெருவில் கொட்டி இருக்கிறார்கள். இவர்களின் மாடல் இதுதான்.

புதுச்சேரியில் நீட் தேர்வு வேண்டாம் வேண்டாம் என்று மாணவர்களைக் குழப்பிக் கொண்டிருந்தபோது புதுச்சேரியில் 300 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளித்து 10% இட ஒதுக்கீடு அளித்து 37 மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார்கள்.

இவர்களால் செய்ய முடியாததைப் புதுவை செய்து வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு 50000/- வைப்புத் தொகை வங்கிக் கணக்கில் வைக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிர்க்கும் ரூ.1000 என வாக்குறுதி அளித்து இரண்டரை வருடங்கள் கழித்து தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது. இவர்கள் கொடுப்பதற்கு முன்பே புதுச்சேரியில் வாக்குறுதி அளிக்காமலே மகளிர்க்கு ரூபாய் 1000 கொடுக்கப்பட்டு விட்டது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறுதானிய சத்துணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்குக் காலை பால் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பண வசதி இருந்தால் மட்டுமே நல்ல கல்வி பெறமுடியும். புதுச்சேரியில் பாமர மக்களும் நல்ல கல்வி பயில சி.பி.எஸ்.சி பள்ளிக்கல்வி முறை அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் புதுச்சேரியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய திமுக - காங்கிரஸ் கூட்டணி செய்ய முடியாத திட்டங்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி செய்து வருகிறது. அதனால் புதுச்சேரியின் வளர்ச்சி குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

துணைநிலை ஆளுநர் என்ற வகையில் பல நல்ல மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வருவதற்கும் மற்றும் பல நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததைப் புதுச்சேரி மக்கள் நன்கு அறிவார்கள். இதை தென்சென்னை மக்கள் புரிந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள்.

கரோனாவை தமிழ்நாட்டை விட சிறப்பாகக் கையாண்டது புதுவை அரசு. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் வரிசையில் நிற்கும்போது புதுச்சேரியில் மூன்று மாதங்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள், ரெம்டெசிவர், ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள் எந்தவித தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்தேன். ஆகையால் புதுச்சேரிக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்ததைப் போல தென் சென்னைக்கும் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவரத் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயர் கல்விக் கட்டணத்தை உயர்த்த சுய நிதி கல்லூரிகள் கோரிக்கை! - Committee On Fixation Of Fee

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.