ETV Bharat / state

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்வீர் சிங் ஐபிஎஸ்-ன் சஸ்பெண்ட் ரத்து! - பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 10:50 PM IST

balveer singh ips
பல்வீர் சிங் ஐபிஎஸ்

IPS Officer Balveer Singh: பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் சஸ்பெண்ட் ரத்து செய்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, உயர்நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் சில காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அப்போதைய சார் ஆட்சியர் முகமது சபீர் கடந்தாண்டு மார்ச் 26 ஆம் தேதி தனது விசாரணை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி பல்வீர் சிங் மார்ச் 29ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கானது ஏப்ரல் 20ம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை: இந்த வழக்கை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் ஏடிஎஸ்பி சங்கர் ஆகியோர் மேற்கொண்டனர். இதனையடுத்து திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 14 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் 4 வழக்குக்களில் பல்வீர் சிங்கும், இரண்டு வழக்குகளில் ஆய்வாளர் ராஜகுமாரியும் உதவி ஆய்வாளர்கள் முருகேஷ் மற்றும் ஆபிரகாம் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றனர். இதனையடுத்து பல்வேறு சாட்சியங்களை நேரடியாகவும் காவல் நிலையத்திற்கும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகள் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்தாண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஏஎஸ்பி பல்சர் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜராகினர்.

இந்த நிலையில் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாகத் தமிழக டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததால் டிஜிபி நேரில் ஆஜராகும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

சஸ்பெண்ட் ரத்து: இது போன்ற சூழ்நிலையில் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணையை நடந்து கொண்டு இருக்கும் வேளையில் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது பல் உடைப்பு விவகாரம் நீர்த்துப் போகிறதா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது.

சஸ்பென்ட் ரத்தானது எப்படி?: இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மதுபிரகாஷை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்ட போது, பொதுவாக காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் தவறு செய்தால் (17a) (17b)என்ற பிரிவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே பிரிவில் அவர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதற்கும் வழிவகை இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்திருக்கலாம் என தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம்: இது குறித்துப் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் மகாராஜனை தொடர்பு கொண்ட போது, இது மக்கள் மீது அரசாங்கம் ஏவுகின்ற அரச பயங்கரவாதம். காவல்துறை மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம் என உணர்த்துவதைப் போல் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இது ஒரு கெட்ட உதாரணம் பொதுவாக சஸ்பெண்ட் உத்தரவை நீண்ட காலம் நீட்டிக்க முடியாது. இருப்பினும் தகுந்த காரணங்கள் இருந்தால் நீட்டிக்கலாம். தற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மிகக் கொடூரமாகக் கைதிகளின் பற்களை உடைத்துள்ளார்.

இவருக்கு மீண்டும் பணி வழங்கினால் அதே வேலையைத் தான் செய்வார். எனவே ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீதான ஜாமீனை ரத்து செய்யக் கோரியும் சஸ்பெண்ட்டை ரத்து செய்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரியும் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளோம் என நம்மிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.