ETV Bharat / state

வறுமையை ஒழிக்க 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்'..! பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 12:23 PM IST

வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம்
வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம்

TN Budget 2024: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழவை மேம்படுத்தும் வகையில், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழக அரசின் நிதிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதில், "கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதை அங்கீகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் 'நிதி ஆயோக்' சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் 2.2 சதவீதம் மக்களே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என அறிவித்துள்ளது.

இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.

ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.