ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியார் இருக்கிறார்.. பழனி கோயில் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 10:56 PM IST

பழனி கோயில் விவகாரம்
பழனி கோயில் விவகாரம்

Palani Temple Entry issue: பழனி முருகன் கோயில் சன்னதியில் தரிசனம் செய்ய மாற்று மதத்தினரை அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மதுரை: பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 படி இந்து அல்லாத சமயத்தினர் கோயிலில் நுழைவதை தடுக்கின்றது. எனவே இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு நுழைய தடை என்ற பதாகையை வைக்க கோரி இருந்தார்.இந்த வழக்கில், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மதக் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்திற்கு அருள்மிகு தண்டயுதபாணி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தாக்கல் செய்த பதில் மனுவில், “பழனி முருகன் கோயிலுக்கு வருபவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும், வெளிநாட்டில் இருந்து வருகின்றனர். பல்வேறு மதத்தினர் முருகன் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் வழிபடுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இந்து சமய முறை மீது நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

பல கோயில்களில் இந்து மதத்தை அல்லாதவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெளிநாட்டினர் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி கொடிமரம் வரை சென்று வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி கோயிலில் முகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பீபீ நாச்சியார் (துலுக்க நாச்சியார்) சன்னதி இருக்கின்றது. இங்கு தின வழிபாடாக காலையில் ரொட்டி மற்றும் வெண்ணெய் படைக்கப்படுகிறது. அதை போல தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் இந்து அல்லாதவர்களை அனுமதிக்க கூடாது என கடந்த 2022ம் மனு பதியப்பட்டது. இதற்கு தீர்ப்பளித்த நீதிமன்றம், “ஒரு கோயிலின் கும்பாபிஷேகம் போன்ற பொது விழாக்கள் நடத்தப்படும்போது, யாரையும் மத அடையாளத்தை வைத்து கண்காணிக்க முடியாத ஒன்று. அதுமட்டுமின்றி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர், குறிப்பிட்ட இந்துக் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அதைத் தடுக்கவோ, கோயிலுக்குள் நுழைவதைத் தடை செய்யவோ முடியாது” என தீர்ப்பளித்திருந்தது.

ஆகவே இந்த விவகாரம் தேவையற்றதாகும். கடவுள் நம்பிக்கை கொண்ட இந்துக்கள் அல்லாதோர் நுழைவதைத் தடுப்பது அவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் ஆகிவிடும்” என தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு இந்து அல்லாதோர் வருவதை தடுக்கும் வகையில் பதாகை வைக்க கோரிய இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "இன்னும் எத்தனை தேர்தலுக்கு எய்ம்ஸை பயன்படுத்துவார்கள் என தெரியவில்லை" - மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.