தென்காசி: சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர், சாம்பவர் வடகரை பகுதியைச் சேர்ந்த முருகன். இவர் இப்பள்ளியில் சுமார் 16 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்த அரசுப் பள்ளி, படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் முன்மாதிரியான பள்ளியாக திகழ்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இப்பள்ளியின் நுழைவிடத்திலேயே இந்தியாவின் வரைபடத்தை வரைந்து, அதில் செடிகளை நட்டு வைத்துப் பராமரித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான ஆசிரியர் முருகன், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், 10ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அறிவியல் பாடம் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அறிவியல் பாடம் கற்பதற்கு சிரமமாக உள்ளது என தெரிவித்ததால், அவர்களுக்கு எப்படியாவது கற்பித்து, அறிவியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என எண்ணிய ஆசிரியர் முருகன், புதுவித முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, பாடல் மூலம் படங்களைக் கற்பித்து வருகிறார்.
எவ்வாறென்றால், மாணவர்களின் கற்றல் திறனையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்கும் விதமாக, அறிவியல் பாடத்தில் உள்ள அலகுகள், தனிம வரிசை அட்டவணை, விதைகள் பரவும் விதம், ஆணிவேர், சல்லி வேர், உடல் உறுப்பு மண்டலங்களின் பணிகள், பற்களின் வகைகள் போன்றவற்றை பாடல் மூலம் கற்பித்து வருகிறார்.
இதுபோன்று பாடல்கள் மூலம் கற்பிப்பதால், மாணவர்களின் மனதில் கல்வி கற்றல் திறன் அதிகரிப்பதாகவும், இவ்வாறு கற்றுக் கொடுப்பதன் மூலமாக, வகுப்பறையில் படிக்காத மாணவர்கள்கூட பாடலை மீண்டும் மீண்டும் கேட்கும்போது, அவர்கள் மனதில் எளிதாகச் சென்றடைவதாகவும், கிராமப்புற பள்ளியாக இருப்பதால், அநேக மாணவர்கள் மிகவும் எளிய முறையில் அறிவியலை கற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு இம்முறை மிகப்பெரிய உதவியாக உள்ளதாகவும் ஆசிரியர் முருகன் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக பள்ளி மாணவர்களிடம் கேட்டபோது, “ஆசிரியர் இவ்வாறு பாடல் மூலம் எங்களுக்கு பாடம் எடுப்பதால், மிகவும் எளிதான முறையில் புரிகிறது. இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு படிக்கும்போது, அறிவியல் பாடத்தை மிகவும் சுலபமாக கற்க முடிகிறது" எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த ஆசிரியரின் கற்றல் வழிமுறையை கடைபிடிப்பதால், பாடங்கள் புரியும்புடியாக எளிய முறையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தற்போது ஆசிரியர் முருகனின் இந்த கற்றல் முறையை அப்பள்ளியில் மட்டுமல்லாது, சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெற்றோரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.