ETV Bharat / state

நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராவில் திடீர் கோளாறு.. காரணம் என்ன? - Nilgiris STRONG ROOM CAMERA PROBLEM

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 10:05 PM IST

Strong Room CCTV Camera Problem In Nilgiris
நீலகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீரென கோளாறு

Strong Room CCTV Camera Problem In Nilgiris: நீலகிரியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் திடீரென டிவி திரையில் ஔிபரப்பாகாததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீரென கோளாறு

நீலகிரி: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரி தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கூடலூர், அவிநாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து வாக்குப்பதிவு இந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

அதன் பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்-க்கு கொண்டு செல்லப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் முன் சீல் வைக்கப்பட்டன. இதையடுத்து, ஸ்ட்ராங் ரூமைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி சார்பாக முகவர்கள் அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.

மேலும், இதைக் கண்காணிக்க 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். அதேபோல், அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை டிவி மூலம் பார்வையிட்டுக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஏப்.26) மாலை முகவர்கள் அமரும் இடத்தில் உள்ள டிவி திரையில், ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திடீரென ஔிபரப்பாகாமல் போய்விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, இதுகுறித்து அங்குள்ள தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தொழில்நுட்ப பிரிவினர் அதை சரி செய்துள்ளனர். அதன்பின், 20 நிமிடங்கள் கழித்து வழக்கம்போல் ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரையில் தெரிந்தது. இதற்கிடையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அருணா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கோளாறு பிரச்னையை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், "கண்காணிப்பு கேமரா வழக்கம்போல் இயங்கி காட்சிகள் சேமிக்கப்பட்டு வந்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிவியில் மட்டும் வெளியாகவில்லை. 20 நிமிடத்தில் இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டு, தற்போது வழக்கம் போல் இயங்குகிறது” என்றனர்.

இதையும் படிங்க: ''வரிப்பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஓரவஞ்சனை'' - சிபிஐஎம் கண்டனம்! - CPIM Balakrishnan About Relief Fund

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.