ETV Bharat / state

திருச்சி மருத்துவமனையில் ராஜீவ் கொலையில் விடுதலையான சாந்தன் அனுமதி! என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 7:48 PM IST

santhan
சாந்தன்

santhan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திர ராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தனுக்கு இரண்டு கால்கள் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவருடைய ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர் கோரிக்கை: கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன். தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் "கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என அதில் கூறி உள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் மனு: மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தன்னை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்க உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சாந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், சமீபகாலமாக தனது உடல் எடை குறைந்து வருவதாகவும், கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உட்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் தனக்கு சிகிச்சை வழங்கிய போதும், அது எந்த பலனும் தராததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிய விண்ணப்பத்தை அரசு அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "காழ்ப்புணர்ச்சி கைது நடவடிக்கையால் நாட்டுக்கு என்ன பயன்"- அமலாக்கத்துறை அதிகாரி வழக்கில் உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.