ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழகத்தை காக்க அரசு முன்வர வேண்டும் - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 12:04 PM IST

state platform for public schools request tn government to protect madras university
சென்னை பல்கலைக்கழகத்தைக் காக்க பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழக அரசுக்கு கோரிக்கை

Madras University Financial Crisis: பொது நிதியில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் தொடர வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: 165 ஆண்டுகள் பழமையான தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் எனும் பெருமைக்குரிய சென்னை பல்கலைக்கழகம், பொது நிதியில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகமாகத் தொடர வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நிதிச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மௌனத்தைக் கலைக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தை காக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில், சில நியமனங்களில் பதவி உயர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, அரசு நிதி வழங்குதல் கடந்த பத்தாண்டுகளில் பெருமளவு குறைந்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருந்தால், அதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தேவைப்படுமேயானால் சட்டப் பேரவையில் விவாதித்து, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யலாம். அத்தகைய நடவடிக்கைகளை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாமல், பல்கலைக்கழகம் செயல்படுவதற்கு அரசு வழங்க வேண்டிய நிதியை பெருமளவு குறைத்து வந்துள்ளது.

இதன் விளைவாக, பென்ஷன் நிதி உள்ளிட்ட பல வகையான நிதியை ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தருவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பயன்படுத்தி உள்ளது. அரசு தர வேண்டிய நிதியை சரியாக அரசு தந்திருந்தால், இந்த நிதி நிர்வாகச் சிக்கல் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டிருக்காது.

ஆராய்ச்சிக்கு தரப்பட்ட நிதியை சம்பளத்திற்கு வழங்கியதாக தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டி, 'நிர்வாகச் சீர்கேடு' என்று வகைப்படுத்தி, அரசு நிதி வழங்குவதற்கு தணிக்கை அறிக்கை ஆட்சேபணை தெரிவித்துள்ளது. இதை சரிசெய்ய அரசு முற்படாமல், இதை காரணம் காட்டி தனது நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டுள்ளது.

இதன் தொடர் விளைவாக, அரசின் ஒதுக்கீடு பல்கலைக்கழகத்தின் செலவுகளில் பாதிக்கு மேல் இல்லை என்பதால், வருமான வரித்துறை தனது சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தை 'தனியார்' பல்கலைக்கழகமாக கருதி வரி விதித்துள்ளது. ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், ஊதியம் தருவதற்கும் நிதி இல்லாத சூழலில், பல்கலைக்கழகம் எவ்வாறு வரி செலுத்த இயலும்?

வரி செலுத்தாத காரணத்தால், பல்கலைக்கழக வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் தொடரும் என்றால் பல்கலைக்கழகம் சீர்குலைந்து, மத்திய அரசு தலையிடும் சூழல் உருவாகலாம். பல்கலைக்கழகம் தனியார் கைவசம் செல்லும் சூழல் உருவாகலாம்.

சமூக நீதியின் அடிப்படையில் அனைவருக்கும் உயர் கல்வி வழங்கி வரும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சீர்குலைக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைப் பார்க்க முடிகிறது.

பத்தாண்டு நிர்வாக சீர்கேட்டை சரி செய்யத்தான், 2021ஆம் ஆண்டில் ஆட்சியை மக்கள் மாற்றினார்கள். ஆட்சி மாறிய பின்னர் கூட, பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்ய அரசு முற்படத் தவறுவது மிகவும் வேதனைக்குரியது. முதலமைச்சர் பார்வைக்கு இந்த சிக்கல் கொண்டு செல்லப்பட்டதா? தமிழ்நாடு அமைச்சரவை பல்கலைக்கழகத்தின் சிக்கல் குறித்து விவாதித்ததா?

குழந்தையைப் பெற்றெடுத்த தாயும், தந்தையும் குழந்தை சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக, குழந்தையைப் பராமரிக்க முடியாது என்று சொல்லத் துணிந்தால், அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதே போன்றுதான் பல்கலைக்கழகத்தின் உரிமையாளரான தமிழக அரசின் நடவடிக்கைகளும் கடந்த பத்தாண்டுகளாக அமைந்துள்ளது.

தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு, தேவையான நிதியை உடனடியாக வழங்கி சென்னை பல்கலைக்கழகத்தை காத்திட முன்வர வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யவும், பல்கலைக்கழகத்தை வலுப்படுத்தவும், சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகமாக நீடித்து நிலைத்திட உரிய பரிந்துரைகளை வழங்கிட வேண்டும்.

அந்த பரிந்துரைகளை வழங்க, சென்னை பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மேனாள் பேராசிரியர்கள், மேனாள் துணைவேந்தர்கள் உள்ளிட்ட பொறுப்புமிக்க ஆளுமைகளைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகி உள்ள சிக்கல், தமிழ்நாடு அரசின் நிர்வாகத் திறமைக்கு விடுக்கப்பட்ட சவால். இந்த சவாலை திறனுடன் எதிர்கொண்டு, சென்னை பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது.

இயற்பியல் அறிஞர் சர்.சி.வி.ராமன், கணித மேதை ராமானுஜன் உள்ளிட்ட எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகத்தைக் காத்திட, சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் விடுக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் போதைப்பொருள் பதுக்கலா? - போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.