ETV Bharat / state

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் ராஜினாமா..? - Kamaraj University VC Resigned

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 12:10 PM IST

Madurai Kamaraj University
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

Madurai Kamaraj University VC Resigned ?: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பில் இருந்து வரும் ஜெ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி 2022ஆம் ஆண்டு முனைவர் ஜெ.குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது தன்னுடைய பணிவிலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும், முன்னாள் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களும் தங்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வப்போது, தமிழக அரசு தற்காலிகமாக நிதி வழங்கி சமாளித்து வரும் நிலையில், பல்கலைக்கழகம் தட்டு தடுமாறி தொடர்ந்து இயங்கி வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் நிதி சிக்கல் காரணமாக பல்கலைக்கழகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள நிர்ணயம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ள நிலையில், தமிழக உயர்கல்வித்துறையும் போதுமான நிதி ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றத்தைக் காரணம் காட்டி செய்யாததாலும், கடுமையான நிதி பற்றாக்குறையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தவித்து வருகிறது.

ஒருபுறம் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுகின்ற போராட்ட நெருக்கடி, மற்றொருபுறம் போதுமான நிதி அரசு தரப்பில் இருந்து கிடைக்காமை ஆகியவற்றின் காரணமாக தற்போதைய துணைவேந்தர் ஜெ.குமார் கடும் மன உளைச்சலில் இருந்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், தனது பதவி விலகல் முடிவை மேற்கொண்டு அதற்கான கடிதத்தை தமிழக ஆளுநருக்கு, துணைவேந்தர் ஜெ.குமார் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது உடல்நலத்தின் காரணமாகவும், யாருடைய நிர்பந்தம் இன்றியும் தான், பதவி விலகுவதாக துணைவேந்தர் ஜெ.குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேலும் சில நாட்கள் துணைவேந்தர் பதவியில் நீடிக்கக்கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எல்நினோவைத் தொடர்ந்து கோடைக் காலத்தில் வெயில் சற்று அதிகமாக இருக்கும்" - வானிலை தன்னார்வலர் ஸ்ரீ காந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.