ETV Bharat / state

உடல் முழுவதும் இலைகளுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்.. காரணம் என்ன? - Anaimalai river issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 1:39 PM IST

sewage- mixed with anaimalai river
Anaimalai river issue

Anaimalai river issue: ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீரைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் சமூக ஆர்வலர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து, ஒப்பந்தப்படி வருடம்தோறும் கேரள மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், ஆனைமலை அம்பராம்பாளையம் வழியாக கேரள மாநிலத்திற்குச் சென்றடைகிறது.

பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களையும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆனைமலை ஆற்றில், கழிவுநீர் நேரடியாக கலந்து நீர் மாசடைகிறது. இதனால், ஆனைமலை ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை பரவி தண்ணீர் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், இதற்கு தீர்வு ஏற்படுத்தக் கோரி, வேட்டைக்காரன் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி என்பவர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு, மாசடைந்த ஆனைமலை ஆற்று தண்ணீரை பாட்டிலில் பிடித்து, இலை தலை செடிகளை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு வந்து மனு அளித்துள்ளார். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இது குறித்து மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர் காந்தி பூபதி கூறுயதாவது, “ஆழியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஆனைமலை, அம்பராம்பாளையம் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகரப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: மே 1 தொழிலாளர் தினம்; உயிராக மதிக்கும் தொழிலாளர்களுக்கு 'மே தின வாழ்த்துகள்' - முதலமைச்சர் ஸ்டாலின் - CM Stalin May Day Wishes

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.