ETV Bharat / state

பைக்கில் மெதுவாகச் செல்லுமாறு கூறியதால் ஆத்திரம்.. சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய 6 இளைஞர்கள் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 4:03 PM IST

சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய 6 இளைஞர்கள் கைது
சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய 6 இளைஞர்கள் கைது

Salem Petrol Bomb: சேலம் மாவட்டத்தில், சாலையில் இருசக்கர வாகனத்தில் மெதுவாகச் செல்லுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பெட்ரோல் வெடிகுண்டு வீசியதால் கைது செய்யப்பட்டனர்.

சேலம்: ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் கிராமத்தில் ஜெயராக்கினி மாதா கோயில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் நேற்று மாலை அதிவேகமாகவும், ஹாரன் அடித்துக் கொண்டும் அடிக்கடி சென்று கொண்டு இருந்துள்ளனர்.

இதனால், அந்தத் தெருவில் சென்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இளைஞர்கள் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அதே பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவர் அந்த இளைஞர்கள் குழுவைத் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால், அவர்கள் நிறுத்தாமல் அவரை மிரட்டிய படியே சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் அதே தெருவில் ஹாரன் அடித்தும், அதிவேகமாகவும் வந்த இளைஞர்களை பெரியநாயகம் தடுத்து நிறுத்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் ரோட்டில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள், திடீரெனக் குழந்தைகள் ஓடி வரும், எதற்காக இப்படி வேகமாக வருகிறீர்கள்' எனக் கேட்டுள்ளார்.

அப்போது, 'என்னையாடா கேள்வி கேட்கிறீங்க, இருங்கடா வரோம்' எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்து இளைஞர்கள் சென்றுள்ளனர். பின்னர், நள்ளிரவு நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் 6 பேருடன் வந்து, 'யாருடா எங்களை மிரட்டியது, தைரியம் இருந்த இப்போது வாங்கடா பாக்கலாம்' என்று கூறிக் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவன், ஆப்ரகாம் வீட்டு காம்பவுண்டு சுவர் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அது சுவரில் பட்டு, கீழே விழுந்து வெடித்து, தீ பற்றி எரிந்தது.

இதனையடுத்து, பின்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து மற்றொரு வாலிபர் வைத்திருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை, சகாயம் என்பவரது வீட்டின் முன்பு ரோட்டில் வீச அங்கும் வெடித்து தீ பற்றி எரிந்தது. பின்பு பைக்கில் இருந்த அனைவரும் 'எவன்டா எங்களை மிரட்டியது ஒழுக்கமா வாயை மூடிக்கிட்டு இருக்கனும், நாங்க வண்டியில எப்படி வேணாலும் போவோம், எங்களை யாரும் கேட்கமுடியாது. மீறிக் கேட்டால் இதே மாதிரி பாட்டிலில் பெட்ரோல் பிடித்து வீசி உங்களைக் கொன்று விடுவோம்' என்று மிரட்டிவிட்டு, இரண்டு பைக்கிலும் வேகமாகச் சென்றுள்ளனர்.

இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்கள் மீது பெட்ரோல் குண்டு பாட்டிலை வீசிக் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டிச் சென்ற கும்பலைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு பெரியநாயகம் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர்.

இதனையடுத்து, விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியது காமலாபுரம், கலர் காடு பகுதியைச் சேர்ந்த விஸ்வா என்கிற விசுவநாதன், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், நந்தகுமார் சாரதி மற்றும் இரண்டு 17 வயது சிறார்கள் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு நான்கு இளைஞர்கள், இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருசக்கர வாகனத்தில் மெதுவாகச் செல்லுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளைச் சாலை மற்றும் வீட்டின் சுவரின் மீது வீசிய சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.