ETV Bharat / state

ஈரோடு கார் விபத்து: நேருக்கு நேர் மோதிய கார்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு - Sathyamangalam Car Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 9:39 AM IST

Sathyamangalam Car Accident
ஈரோடு கார் விபத்து

Sathyamangalam Car Accident: சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு: கோவை மாவட்டம், சிறுமுகை ஜடையம்பாளையத்தில் கொசு வலை வியாபாரம் செய்து வந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த முருகன். இவர் தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8), மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்றிரவு காரில் கரூர் சென்றுவிட்டு இன்று (மே 1) அதிகாலை சிறுமுகை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களின் கார், நெசவாளர் காலனி என்ற இடத்தில் அவ்வழியாக வந்த முருகன் கார் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குடும்பத்தோடு முருகன் வந்த கார் அப்பளம் போல நொறுங்கியது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த முருகனின் மகள் நித்திஷாவை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, இந்த விபத்து தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பன்முகக் கலைஞர்' தலைப்பில் 10-ஆம் வகுப்பு பாடத்தில் கருணாநிதி வரலாறு.. சிறப்புத் தொகுப்பு! - 10th Class Tamil Text Book

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.