ETV Bharat / state

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:54 PM IST

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்.25 ம் தேதி முதல் மே.2 ம் தேதி வரை நீட் பயிற்சி
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்.25 ம் தேதி முதல் மே.2 ம் தேதி வரை நீட் பயிற்சி

NEET coaching: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சிகள் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை மாவட்ட அளவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை: ஏற்கனவே நீட் தேர்வினை எழுதுவதற்கு பள்ளியளவில் வழங்கப்பட்ட பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் வழங்கப்படும் எனவும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வந்து செல்வதற்கான பேருந்து கட்டணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,“2023-2024 கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில், நீட் போட்டித் தேர்விற்கு நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 12 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பின்னர், மார்ச்.25 ம் தேதி முதல் மே 2 ம் தேதி வரை, நீட் தேர்வு சார்ந்த பயிற்சிகளும், தேர்வுகளும் மாவட்ட அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ‌ நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை பள்ளி அளவில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு மாவட்டத்திற்கு அதிகபட்சம் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்திற்கு 40 மாணவர்கள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதள வசதி மற்றும் (Smart Class Room) ஸ்மார்ட் கிளாஸ் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்ய வேண்டும். பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடைபெறும்.

ஒரு மையத்திற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே திறமையும், ஆர்வமும், விருப்பமும் உடைய ஆசிரியர் குழுவினை தெரிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நீட் தேர்வு சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒவ்வொரு மையத்திற்கும் நாள் ஒன்றுக்கு 4 ஆசிரியர்கள் விலங்கியல், வேதியியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் என்ற வரிசையில் ஆசிரியர்கள் விருப்ப பாடம் அடிப்படையில் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பயன்படுத்தலாம். அனைத்து பாடங்களிலும் அனைத்து பாடப்பகுதிகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நவம்பர் மாதம் முதல் வழங்கிய பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். நவம்பர் 2023 முதல் இப்பயிற்சியில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாளான மார்.9 ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்பட்ட பயிற்சி மையங்களுக்கு பாதுகாப்பாக சென்று வருவதை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருவதற்கான பேருந்து கட்டணத் தொகை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனி வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். காலை சிற்றுண்டி 8.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படும். ஒவ்வெரு சனிக்கிழமை அன்றும் காலை 9.15 மணி முதல் 10.45 மணி வரை திருப்புதலும், அதைத் தொடர்ந்து 11 மணி முதல் 12.40 மணி வரை வாராந்திர தேர்வுகளும் நடைபெறும்.

மதிய உணவு இடைவெளிக்குப்பின் பிற்பகலில் கலந்துரையாடல் மற்றும் மோட்டிவேஷன் அமர்வுகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் மொத்தம் 3 திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்”, என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு; 12,696 மாணவர்கள் ஆப்செண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.