ETV Bharat / state

திருச்செந்தூர் அருகே வெறும் கைகளால் கழிவுநீரை அகற்றும் தூய்மைப் பணியாளர்கள்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! - Sanitation workers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 10:18 PM IST

Sanitation workers cleaning sawage water: திருச்செந்தூர் சாலையில் தேங்கிய கழிவு நீரை நகராட்சி ஆணையர் முன்பு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் சுத்தப்படுத்தியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீரை அகற்றும் தூய்மை பணியாளர்கள்
கழிவுநீரை அகற்றும் தூய்மை பணியாளர்கள் (Credits -ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: திருச்செந்தூர் சாலையில் தேங்கிய கழிவு நீரை நகராட்சி ஆணையர் முன்பு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் சுத்தப்படுத்தியது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 27 வார்டுகளை உள்ளடக்கிய இந்த நகராட்சியில், 82 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆன்மீக சுற்றுலா நகரமாக திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் கழிவு நீர் தேங்கியுள்ளது. அதனை தூய்மைப் பணியாளர்கள் கையுறை, காலுறை, முகக்கவசம் மற்றும் சுத்தப்படுத்தும் பிரத்யேக கருவிகள் ஏதும் இல்லாமல், நகராட்சி ஆணையர் முன்பாக வெறும் கைகளால் சுத்தப்படுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கழிவு நீரை அகற்ற அதிநவீன இயந்திரம் இருந்தும் பணியாளர்களை வெறும் கைகளால் ஈடுபட வைத்துள்ளதாகவும், எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திருச்செந்தூர் அருகே கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி, திருச்செந்தூர் நகராட்சி 10-வது வார்டு இராமசாமிபுரம் பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 45 வருடங்களுக்கு முன்பாக, திருச்செந்தூர்-திருநெல்வேலி சாலையில் உள்ள தென்றல் நகரில் 69 சென்ட் பரப்பளவில் விவசாய நிலம் வாங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் போதிய மழை இல்லாததால், கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு விவசாய நிலத்தில் சுமார் 20 சென்ட் பரப்பளவை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து 4 ஆண்டுகளாக திருச்செந்தூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நடவடிக்கை எடுக்காத வருவாய்த் துறையைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் இன்று திடீரென திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் விளை நிலத்தை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பணத்தை வெளியே எடுத்துச் செல்பவரா நீங்கள்? ஆந்திர கும்பலை சுத்துப்போடும் தமிழக போலீஸ்! - Money Theft Andhra Gang

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.