ETV Bharat / state

'உங்களைத் தேடி.. உங்கள் ஊரில்' தொடக்கம் சேலத்தில் தொடக்கம்- மேட்டூரில் கள ஆய்வில் ஆட்சியர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 4:41 PM IST

சேலத்தில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' தொடக்கம்
சேலத்தில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' தொடக்கம்

Ungalai Thedi, Ungal Ooril : மக்களின் தேவைகளை கண்டறிந்து தீர்வு காணும் வகையில் தமிழக அரசின் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' எனும் புதிய திட்டம் மேட்டூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது.

சேலம்: அரசின் நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையிலும், குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் கிராமத்தில் தங்கி கள ஆய்வு செய்யும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்கிற தமிழக அரசின் புதிய திட்டம் இன்று (ஜன. 31) முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது.

அதன்படி 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாமானது, மேட்டூர் வட்டத்தில், சேலம் மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி, தலைமையில் இன்று (ஜன.31) தொடங்கியது. இந்த திட்டம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், "இத்திட்டம் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இனி ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட முகாமானது, இன்றைய தினம் காலை 9 மணிக்கு மேட்டூர் வட்டத்தில் தொடங்கியுள்ளது. மேட்டூர் வட்டத்திற்குட்பட்ட 48 வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை 8.30 மணிக்கு மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் களப்பணிக்குச் செல்லும் அரசு அலுவலர்களுடன் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேட்டூர் வட்டத்தில் களப் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் 1.30 மணி வரை இ-சேவை மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

மேலும், பகல் 2.30 மணி முதல் 4.30 வரை மேட்டூர் வட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலர்களின் கருத்துக்கள் அடிப்படையிலான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொது மக்களுடனான கலந்துரையாடலும், மாலை 6 மணி முதல் தொடர்புடைய வட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தெரு விளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், அரசு விடுதிகள், பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

கள ஆய்விற்குச் செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி நாளைய தினம் அதிகாலை 6 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், பொதுப் போக்குவரத்துச் சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பால் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா மேச்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் இடம் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொண்டு, போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தார்.

மேலும், சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவைப்படும் வசதிகள் குறித்து நிலை மருத்துவரிடம் கேட்டு, அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: மறக்காம குடையை எடுத்துக்கோங்க.... தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.