ETV Bharat / state

காதலர் தினம்; ஓசூரிலிருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 60% குறைவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 8:53 PM IST

roses exported from the hosur on valentines day
காதலர் தினத்தன்று ஓசூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரோஜாக்கள்

Valentines Day 2024 Rose Export: காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பகுதியில் ரோஜா மலர்களின் ஏற்றுமதியும் விலையும் கடந்தாண்டை விட 60% குறைந்துள்ளதாகக் கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று ஓசூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரோஜாக்கள்

கிருஷ்ணகிரி: உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கு ரோஜா மலர்கள் அனைவருடைய மனதிலும் குடி கொண்டிருக்கும். தமிழகத்தின் எல்லையான ஓசூர் பகுதியில் ரோஜா உற்பத்தி அதிக அளவில் மேற்கொள்வதால் ஓசூருக்கு ரோஜா நகரம் என்ற பெயரும் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி வருடம் முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் காய்கறி உற்பத்தி மட்டுமின்றி மலர் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓசூர், தளி, தேன்கனிக் கோட்டை, பாகலூர், பேரிகை போன்ற பல பகுதிகளில் விவசாயிகள் பசுமைக் குடில்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் தாஜ்மஹால், கிராண்ட் காளா, அவலான்ஸ், நோ ப்ளஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வகையான மலர்களை உற்பத்தி செய்கின்றனர். வருடம் முழுவதும் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் குறிப்பாகக் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினங்களில் அதிக அளவில் மலேசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் பாபு இன்று (பிப்.13) செய்தியாளர்களை ஓசூரில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓசூர் பகுதியில் காதலர் தினத்திற்காக ஆண்டுதோறும் காதலை வெளிக்காட்டும் சிவப்பு நிற ரோஜாக்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதும் விவசாயிகள் அதற்காகத் தயாராவதும் வழக்கம்.

கடந்த ஆண்டு 3 கோடி மலர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்ததால் 5 கோடி மலர்களை விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் என்றாலும் விலை குறைவு என்பது விவசாயிகளுக்குச் சோகம் தான்.

உற்பத்தி செய்யப்பட்ட 5 கோடி மலர்களில் 40 லட்சம் மலர்கள் மட்டுமே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால் 60% அளவிற்கு அதிகமாக ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் ரூ.23-க்கும், வெளிநாடுகளுக்கு ரூ.28 வரையிலும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டு உள்ளூரில் ஒரு ரோஜா மலர் 12 முதல் 15 ரூபாய்க்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு ரோஜா மலர் 18 ரூபாய்க்கு மட்டுமே விலை கிடைத்துள்ளது. மேலும் உள்ளூரில் சுப நிகழ்ச்சிகள் குறைந்ததும், பீனியா நாட்டின் மலர்களுக்கு உலக சந்தையில் வரவேற்பு அதிகரித்ததே விலை வீழ்ச்சிக்கான காரணம்.

இதுமட்டும் அல்லாது, பூனே நர்சரியில் வாங்கப்பட்ட தாஜ்மஹால் வகை ரோஜாக்கள் விரைவில் உதிரும் வகையிலிருந்ததே சர்வதேச அளவில் விலை குறைந்ததற்குக் காரணம் ஆகும். மேலும், ஓசூர் பகுதியில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சர்வதேச மலர் ஏல மையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் ஒரு மலருக்குக் கூடுதலாக 5 ரூபாய் லாபம் கிடைக்கும்" என்று தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா - ஆளுநர் ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.