ETV Bharat / state

தொடங்கியது வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தம்; வெறிச்சோடிய அலுவலகங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 12:17 PM IST

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

Revenue officers strike: பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (பிப்.27) தொடங்கியது.

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி, பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கோரிக்கைகள்:

  1. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 10 மாதங்களுக்கு முன்னதாக, 3 அமைச்சர்கள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது தாமதமின்றி அரசாணை வெளியிட வேண்டும்.
  2. 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் செய்ய விதித்திருந்த அரசாணையை வெளியிட வேண்டும்.
  3. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிடப்பட்ட பின்பும், காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புதல் வேண்டும்
  4. வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.
  5. பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை வழங்க வேண்டும்.
  6. பொதுமக்களுக்கான சான்றிதழ் வழங்கும் துணை வட்டாச்சியர் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்புதல் வேண்டும்.
  7. பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து செய்தல் மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை, சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) வைர விழா ஆண்டில், அனைத்து கோரிக்கைகள் மீது தீர்வு எட்டப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்” என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் வலுக்கட்டாயமாக கைது - ஏஐகேகேஎம்எஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.