சென்னை: உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 1981-ம் ஆண்டு எனக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இது 2022-ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தேன். அதில் என் மீதான வழக்கு விவரங்களையும் தெரிவித்திருந்தேன்.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த ஆண்டுகளாக பேசி வருகிறேன். எனது பேச்சு சர்வதேச சட்டத்தை மீறியது என்பதால் சர்வதேச சட்டங்களை அவமதிக்கும் உங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரும் விண்ணப்பத்தை நாங்கள் ஏன் நிராகரிக்கக் கூடாது? என அதிகாரிகள் கேள்வி எழுப்பி என் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொன்னதால் என் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை. அப்படியானால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கச்சத்தீவு குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சர்வதேச அளவிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகையால் பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் ரத்து செய்வார்களா? அப்படி இல்லை எனில் எனது பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு