ETV Bharat / state

ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:52 PM IST

ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Ranipet Collector: ராணிப்பேட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வைக்கப்பட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.

ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில், பொங்கல் போனஸ் தருவதில் குளறுபடி நடப்பதாக, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி, இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம், ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசுகையில், “வாலாஜாபேட்டை அடுத்த சுமைதாங்கி பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் தனி அதிகாரிகள் பொறுப்பு வகிக்கும்போது, ஒரு லிட்டர் பாலுக்கு ஒரு ரூபாய் 25 பைசா போனசாக வழங்கினர்.

இப்போது வெறும் 80 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் ஏதோ தில்லு முல்லு நடக்கிறது. அரசியல் தலையீடும் இருப்பதாகத் தெரிகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சில கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் தரவே இல்லை. மாவட்டம் முழுவதும் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் டிஜிபி நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து பேசிய மற்றொரு விவசாயி, “அரக்கோணம் அடுத்த மேல்களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில், 200 விவசாயிகள் பயிர் கடனுக்காக மாதக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு விரைந்து பயிர்கடன் வழங்க வேண்டும். பயிர்க்கடன் வழங்கினால் உரம் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும். பயிர்க்கடன் தராமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். அதே போன்று, சில இடங்களில் உரம் தட்டுப்பாடும் உள்ளது” என குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆவின் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை, அவர்களுக்கு விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும், விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என தொழிலாளர் சிறப்பு இணை ஆணையர் ரமேஷ் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.