ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை; படகுகளில் கருப்பு கொடி ஏற்றி வேலைநிறுத்தப் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 11:00 AM IST

Updated : Feb 20, 2024, 2:03 PM IST

கருப்பு கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டம்!
ராமேசுவரம் மீனவர்கள்

Rameswaram fishermen strike: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து, ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகின் ஓட்டுநர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்குவதை கண்டித்தும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்புக் கொடி ஏற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, 2 விசைப்படகுகளையும், அதில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (பிப்.17) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (பிப்.18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில், படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போரட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களுடைய படகுகளில் கருப்புக் கொடி கட்டி போரட்டம் நடத்தி வருகின்றனர்.

மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தினால், 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாது, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்..!

Last Updated :Feb 20, 2024, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.