ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 10:04 PM IST

அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

TN Government School Admission: அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

சென்னை: இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகளான தற்காப்புக்கலை பயிற்சி, கல்விச் சுற்றுலா, கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகள், கலைத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசுப் பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் தகவல்களை பொதுமக்களுக்கு செய்தியாக வெளியிட வேண்டும். பள்ளி வாரியாக 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் குறித்து ஏற்கனவே எடுத்துள்ள கணக்கெடுப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை வீடுகள் தோறும் சென்று சரியாகவும், துல்லியமாகவும் எடுத்து தொடக்கக் கல்வி பதிவேடானது (EER) பராமரிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்த பதிவேட்டில் ஐந்து வயது நிரம்பிய அனைத்து மாணவர்களையும் முதல் வகுப்பில் சேர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு மற்றும் சேர்க்கை பேரணி நடத்துதல், அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ்வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சார்ந்தும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி மாணவர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை, பெண் கல்வி இடை நிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் தகவல்களை பெற ஏதுவாக 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு 10 கணினிகளும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் என மொத்தம் 6,029 பள்ளிகளுக்கு 5 அல்லது 6 Mbps வேகம் கொண்ட அகண்ட அலைவரிசைக் கற்றை வசதி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான கற்றல் வளங்கள் (Learning Resources) மற்றும் டிஜிட்டல் மதிப்பீடு ஆகியவற்றை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) மற்றும் திறன் மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) அமைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 6,029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயனடைந்து வரும் நிலையில் இவ்வசதியினை மேலும் விரிவாக்கம் செய்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கும் பொருட்டு 7,956 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,180 உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.523,52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன.

உயர்தொழில் நுட்ப ஆய்வக வசதிகளுடன் சேர்த்து 1,129 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,582 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ. 30,05 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், 4 இணை சீருடைகள், புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், காலணிகள், கிரையான்ஸ், நிலவரை படம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை ஆதி திராவிட நல ஊக்கத் தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறித் தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, கோவிட்-19இல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, காலை சிற்றுண்டி திட்டம்

சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல் உள்ளிட்ட அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை அனைவரும் அறியச் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி பள்ளி வழியாக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “ஏன் வேறு இடத்தை ஒதுக்கக்கூடாது?” - மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.