ETV Bharat / state

எங்களால் முடிந்த பணத்தை தறோம் பள்ளியை நடத்துங்க.. நெல்லை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்! - Venkatarayapuram middle school

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 6:23 PM IST

திருநெல்வேலி
திருநெல்வேலி

Tirunelveli Collectorate: திருநெல்வேலி மாவட்டம் வெங்கட்ராயபுரம் நடுநிலைப்பள்ளியை அரசு பள்ளியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

எங்களால் முடிந்த பணத்தை தறோம் பள்ளியை நடத்துங்க.. நெல்லை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்!

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி தாலுகா, வெங்கட்ராயபுரம் பகுதியில் தனியார் அறக்கட்டளை நிறுவனம் மூலம் கடந்த 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1990களில் பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை இல்லாத நேரத்திலும் அந்த பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், பள்ளியில் போதுமான நிதி இல்லை எனக் கூறி அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என பள்ளி நிர்வாகத்தின் மூலம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளியை நிறுத்தக்கூடாது தொடர்ந்து செயல்படுவதற்கு தங்களால் இயன்ற நிதியைத் தருகிறோம் என தெரிவித்த நிலையிலும் பள்ளி செயல்படாது என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊர் பொதுமக்கள் மற்றும் பழைய மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நடுநிலைப் பள்ளியாக இருந்த மரியா கிரேஸ் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர்.

சுமார் 34 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், பள்ளியின் இந்த திடீர் அறிவிப்பால், 9-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், 10-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம். எனவே அரசு இந்த பள்ளியை கையகப்படுத்தி அரசுப் பள்ளியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கையை அதில் முன் வைத்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவைச் செலுத்திச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.4 கோடி விவகாரம்; மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு! - RS 4 Crore Seized Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.