ETV Bharat / state

தருமபுரி மாட்டிறைச்சி விவகாரம்; ஓட்டுநர், நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 6:50 PM IST

தருமபுரி மாட்டிறைச்சி விவகாரம்
தருமபுரி மாட்டிறைச்சி விவகாரம்

Dharmapuri Govt bus Beef Issue: தருமபுரியில் பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை, பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாட்டிறைச்சி விவகாரம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் வரை செல்லும் அரசுப் பேருந்தில் கடந்த பிப்.20ஆம் தேதி 59 வயது மதிக்கத்தக்கப் பெண், பயணம் செய்து போது, அவர் மாட்டிறைச்சியை எடுத்து வந்ததாகக் கூறி, பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் நடுவழியில் அப்பெண்ணை இறக்கி விட்டுள்ளனர். இதனால், செய்வதறியாது தவித்த பயணி நடந்தே அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மீண்டும் அதே வழியில் வந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண் பயணியைப் பாதுகாப்பில்லாமல் நடு வழியில் இறக்கி விட்ட சம்பவம் போக்குவரத்துக் கழகத்திற்குத் தெரிய வந்ததையடுத்து, பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதனால் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆகிய இருவரையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், “நான் கடந்த 30 ஆண்டுகளாக மாட்டு இறைச்சியை விற்பனை செய்து வருகிறேன். கணவா் இறந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக இறைச்சியை விற்றுப் பிழைப்பு நடத்தி வருகிறேன்.

எனக்கு இதைவிட எந்த வேறு எந்தத் தொழிலும் தெரியாது. இது தான் எனக்குத் தெரிந்த தொழில். கடந்த ஆறு மாதமாகப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் ஏற வேண்டாம் என என்னை எச்சரித்து வந்தனர். இன்று ஒரு நாள் மட்டும் விடுங்கள், எனக்காக 40 பேர் காத்திருப்பார்கள் என்று கூறிய போதும், நீ இறங்கு, நீ ஒரு பொம்பளையா எனக் கூறி உடனடியாக இறங்கச் சொன்னார்கள். எனக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருக்கிறது.

அழுத்தம் கொடுக்காதீர்கள் என்று தெரிவித்தும் எது வாயிருந்தாலும் இறங்கு என்று பேருந்திலிருந்து இறக்கி விட்டு விட்டார்கள். இறக்கி விட்ட இடத்திலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கும் இன்னொரு பேருந்து நிறுத்தத்திற்கும் மூன்று கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும் பகுதியில் என்னை இறக்கி விட்டு விட்டார்கள். உட்கார்ந்து உட்கார்ந்து நடந்து சென்றேன். அப்போது வழியில் வந்த பேருந்தில் ஏறிச் சென்றேன்” என்று வருத்தத்துடன் தனக்கு ஏற்பட்ட சிரமத்தைத் தெரிவித்தார்.

இதே பேருந்தில் பயணம் செய்த தென்னரசு பேசும் போது, “நானும் பாட்டியும் பேருந்தில் ஒன்றாகத் தான் பயணம் செய்தோம். கறி வாங்கிக் கொண்டு வருவதைக் கவனித்த பேருந்து நடத்துநர் எனக்கு டிக்கெட் கொடுத்து விட்டு, எனக்கு அடுத்த இருக்கையில் பாட்டியிடம், உனக்கு எத்தனை முறை சொல்வது?, உனக்கு இதே வேலையா கறி எடுத்துக் கொண்டு ஏறக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா?, இறங்குங்கள் என்று கூறி பேருந்தை எடுக்காமல் நிறுத்திவிட்டார்கள்.

நீங்கள் இறங்கினால் மட்டுமே பேருந்தை எடுப்போம் என்று கூறி காட்டுக்குள்ளேயே பேருந்து கால் மணி நேரம் பேருந்தை நிறுத்தி, பாட்டியை இறக்கி விட்டார்கள். இதே பேருந்து திரும்பி இரவு ஒன்பது முப்பது மணிக்கு வந்த போது நிறுத்தி, பாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டது குறித்து முறையிட்டோம். அப்போது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை, பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.