ETV Bharat / state

"வணிகர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய அரசுதான் அமைய வேண்டும்" - விக்கிரமராஜா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 10:24 AM IST

president of Merchant Association Vikrama Raja
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா

Vikrama raja: நாடாளுமன்றத் தேர்தலில் வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய அரசுதான் அமைய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி

மயிலாடுதுறை: வணிக சங்கங்களின் தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சீர்காழியில் நேற்று (பிப்.14) நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதன் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் 41வது மாநில மாநாடு, வருகின்ற மே 5ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.

அம்மாநாடு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தஞ்சை மண்டலத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில், அனைத்து மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்பது என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் வணிகர்களின் பாதுகாப்பு மற்றும் கோரிக்கை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதனை மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் நிறைவேற்றித் தர அழுத்தம் தர இருக்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், தேர்தலில் வணிகர்களின் ஓட்டு யாருக்கு என்பதற்காக, வணிகர்களின் கோரிக்கையை யார், யார் நிறைவேற்றுவார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை தந்துள்ளோம். வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய அரசுதான் அமைய வேண்டும் என வணிகர் மத்தியிலே சூசகமாக வலியுறுத்த தொடங்கியுள்ளோம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் நகராட்சி சம்பந்தப்பட்ட கடை வியாபாரிகளுக்கு, மீண்டும் கடை தருவதாக உறுதியளித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று வரக்கூடியவர்ளுக்கு பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால், கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடுக்கு உடனடியாக மினி பேருந்து, தொடர் பேருந்து இயக்கிட வேண்டும். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திய பிறகு, முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அதனை விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறார். அது கட்டாயம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு வணிக சங்கப் பேரவை அழுத்தம் தரும். முதலமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று, அரசும் அழுத்தம் தரக்கூடிய தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்.

புகையிலை தயாரிப்பு கம்பெனி ரசீது போட்டு வாங்கி, மெல்லும் புகையிலையை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் வியாபரிகளை கைது செய்வது, கடைகளை சீல் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. புகையிலை உற்பத்தியிடத்தை சீல் வைக்க வேண்டுமே தவிர, வியாபாரிகளை அச்சுறுத்துவதாகவும், கடைகளுக்கு சீல் வைப்பது என்பது அறவே இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளோம். அதேவேளையில், வியாபாரிகள் அரசு தடை செய்துள்ள புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “கலெக்டரை தூக்கினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும்”.. நெல்லை திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.