திருப்பூர்: திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம், அப்பகுதி செயலாளர் வி.பி.என்.குமார் மற்றும் கண்ணப்பன் ஏற்பாட்டில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில், ராக்கியாபாளையம் மற்றும் சிடிசி கார்னர் பகுதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசுகையில், "தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சியில் திருப்பூர் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் பொதுமக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பூரிலிருந்து தென் மாவட்ட மக்கள் அனைவரும், அவரவர் ஊர்களுக்கு போய்க்கொண்டு இருக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நிறுவனங்களில் அதிமுக ஆட்சிக் காலத்தில் வட்டியில்லாக் கடன் கொடுத்து, அவர்கள் வாழ்வாதாரத்தைக் காத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது திமுக ஆட்சியில் நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்று பேசினார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடு செய்யச் சென்றார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!