ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்களை கைது.. உணவு, தண்ணீர் கொடுக்காமல் அலைக்கழித்த காவல்துறை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 10:43 PM IST

SSTA Protest: சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் போராட்டத்திற்குச் சென்ற இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உணவு, தண்ணீர் என எதுவும் அளிக்காமல் அடைத்து வைத்துள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SSTA Protest
இடைநிலை ஆசிரியர்களை கைது

இடைநிலை ஆசிரியர்களை கைது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது. 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என உள்ளது. மேலும் ஒரே பணி - ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதைக் களையக் கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என்ற எங்கள் கோரிக்கையை இடம் பெறச்செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு வந்தவர்களை, காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.

கைது செய்த ஆசிரியர்களை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையின் வாகனத்தில் வைத்துச் சுற்றி உள்ளனர். அதன் பின்னர் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் என எதுவும் தராமல் ஆசிரியர்களைத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி இன்று (பிப்.19) நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 10ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல்: "மேயர் தேர்தலில் குதிரை பேரம்"- மறுதேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.