கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 5ஆம் தேதி இரவு வயிற்று வலி ஏற்பட்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து, அச்சிறுமிக்கு ஓம வாட்டர் கொடுத்த பெற்றோர், பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினம் இரவே, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு உடல்நிலை மோசமான சூழலில், சிகிச்சையில் இருந்த சிறுமியின் வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமி, நேற்று (மார்ச் 7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ள பெற்றோர், அதேசமயம் மருத்துவ ரீதியிலான காரணங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், தங்கள் மகள் பள்ளியில் கொடுக்கும் FERROUS SULPHATE & FOLIC ACID மாத்திரைகளை உட்கொண்டு வந்தார் என்ற தகவலையும் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சிறுமியின் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறினர். குழந்தையின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு மொத்தமும் பேட்ச் ஒர்க்.. கோவை சித்தாபுதூரில் புலம்பும் பயனாளிகள்!