ETV Bharat / state

பாஸ்ட் புட் கடைகளே டார்கட்.. ஊழியர்களின் செல்போனை நூதன முறையில் திருடிய பலே கில்லாடி.. சிக்கியது எப்படி?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 5:03 PM IST

Etv Bharat
Etv Bharat

Chennai Crime News: ஆண்பாவம் திரைப்பட பாணியில், ஓட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு பணம் தருவதாக ஊழியர்களை அழைத்து சென்று நூதன முறையில் செல்போனை திருடி வந்த நபரை, ராமாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: வளசரவாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உணவு ஆர்டர் செய்து வாங்கிவிட்டு, திரைப்பட பாணியில் பணமும் தராமல், உணவு கடை ஊழியரின் செல்போனையும் மர்ம நபர் ஒருவர் நூதன முறையில் ஏமாற்றிச் சென்ற சம்பவம் நிகழ்ந்ததாக பாஸ்ட் புட் கடை சார்பில் ராமாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரில், "வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் முல்லை நகர் பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த நபர் ஒருவர் 5 சிக்கன் ரைஸ், சிக்கன் லாலிபாப் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். பின்னர் தான் அருகில் வசித்து வருவதாகவும், பணம் கொண்டு வரவில்லை ஊழியரை அனுப்பினால் பணத்தை கொடுத்து அனுப்புவதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய கடை உரிமையாளர், ஊழியரை அனுப்பியுள்ளார். அப்போது அந்த நபரின் செல்போனை வாங்கி, வீடு மேலே தான் உள்ளது எனத் தெரிவித்துவிட்டு, போனில் மேலே வரும் நபரிடம் பணம் கொடுத்து அனுப்பு என பேசுவது போல் பாவலா காட்டியதாகவும், பின அந்த வாலிபர் மேலே சென்று பார்த்தபோது, அங்கு யாருமில்லை என ஊழியர் கீழே வந்து பார்த்த போது, அந்த நம்பர் செல்போனை எடுத்துச் சென்றதாகவும், அப்போதுதான் தங்களை அந்த நபர் ஏமாற்றியது தெரிய வந்ததாகவும் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த புகாரின் அடிப்படையில், ராமாபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜன.12ம் தேதி கிடைத்த சிசிடிவிகளின் அடிப்படையில் விசாரித்த போது, மோசடியில் ஈடுபட்ட நபர் கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த நசீர் கான்(34) என்பது தெரிய வந்துள்ளது.

அதையடுத்து, ஆதாரங்களின் அடிப்படையில் வீட்டில் இருந்த நசீர் கானை ராமாபுரம் போலீசார் கைது செய்து, இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது, இவருக்கு ஆண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், திருமணமாகி, இதுவரை 6 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், தற்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது மனைவி தற்போதும் கர்ப்பமாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நசீர் கான் இதற்கு முன்னர் வாசனை திரவியம் தொழில் செய்து வந்ததாகவும், அதில் போதிய வருமானம் இல்லாததால், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த திருட்டு சம்பவம் போன்று, வளசரவாக்கம், ராமாபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று உணவுகளை வாங்கிக் கொண்டு, இதேபோல செல்போன்களை பறித்துச் சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்த 5 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பறித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ராமாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது திரைப்பட பாணியில் உணவை வாங்கிக் கொண்டு, ஊழியர் கவனத்தை திசை திருப்பி செல்போனையும் திருடிச் செல்லும் வழக்கில் முதல் முறையாக ஒருவரை கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை..! கேரளாவில் நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.