ETV Bharat / state

தேனியில் தாய் - மகன் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 12:37 PM IST

கிஷோர் குமார், மாரீஸ்வரி
கிஷோர் குமார், மாரீஸ்வரி

Theni Suicide Case: உத்தமபாளையம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான்பட்டி பாலோடை பகுதியைச் சார்ந்தவர் குமரேசன், வேளாண்மைத் துறையில் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி (54) என்ற மனைவியும், கிஷோர் குமார் (29) என்ற மகனும் உள்ளனர். கிஷோர் குமார், தேனியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக, அவர் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

அவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் முடிந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தேனி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. கிஷோரின் மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவரது தந்தை வீட்டிலேயே இருந்து வந்து நிலையில், மனைவியின் தந்தை மற்றும் உறவினர்கள் சிலர் தொடர்ந்து கிஷோரையும், அவரது குடும்பத்தையும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக

இந்த நிலையில், கடந்த பிப்.25ஆம் தேதி, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள உறவினர் இல்லத்திற்குச் சென்று விட்டு தந்தை குமரேசன் அங்கேயே தங்கி விட, நேற்று (பிப்.27) காலை மாரீஸ்வரி மற்றும் கிஷோர் குமார் ஆகிய இருவரும் தங்களது வீட்டுக்கு வந்துள்ளனர். இதனிடையே வீட்டிலிருந்து வெளியே வந்த கிஷோரை அவரது உறவினர்கள் பார்த்தபோது, உடல்நிலை சரியில்லாதது போல் காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அவரிடம் விசாரித்தபோது, தானும் தனது தாயார் மாரீஸ்வரி ஆகிய இருவரும் தற்கொலை செய்ய முயற்சி எடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பலனின்றி கிஷோர் குமார் மற்றும் அவரது தாயார் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

இதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர், கிஷோர் மற்றும் மாரீஸ்வரியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் 59 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை - தேனி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.