ETV Bharat / state

"கொத்துக் கொத்தாக வாக்குரிமை பறிப்பு.. திமுக மௌனம் சாதிப்பது ஏன்?" - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு! - Tamilisai Soundararajan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 1:12 PM IST

Updated : Apr 24, 2024, 2:27 PM IST

Tamilisai Soundararajan
தமிழிசை சௌந்தரராஜன்

Tamilisai Soundararajan: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டதாகவும், மாநகராட்சி பணியாளர்களுக்கு தேர்தல் பணிகள் வழங்கியதே இக்குளறுபடிக்கு காரணம் எனவும், சிறுபான்மையினருக்கு எதிரானவராக பிரதமர் மோடி என காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்வதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் கோவையில் பேட்டி

கோவை: தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்தது. அதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதேநேரத்தில், பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை கொத்துக் கொத்தாக மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்தபோதும் அவர்களது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்திருக்க வேண்டும். மாநகராட்சி பணியாளர்களுக்கு இப்பணிகளை வழங்கியதால் தான் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி, எவ்வித மத பாகுபாடுமின்றி அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மோடி முன்வைத்து வருகிறார். அதுவே, காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது, நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை எனக் கூறினார். இப்படி பேசியதைத் தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.

நாட்டு சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்கு செல்வதா?: இஸ்லாமியப் பெண்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது. அலிகார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இஸ்லாமிய பெண்கள் துணைவேந்தராக இருந்ததில்லை; இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், நாட்டின் அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை மோடி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நாட்டின் சொத்துக்கள் ஊடுருவல்காரர்களிடம் மட்டுமே சென்று விடக்கூடாது என மோடி பேசியுள்ளார். இதனை சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி என காங்கிரஸ் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறது.

ஜனநாயக உரிமைக்கான குரல்: வாக்காளர் பட்டியலில் மொத்தமாக வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மௌனம் சாதிக்கின்றனர். ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது, அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை? என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்கே அவர்கள் தான் காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், தோல்வி பயத்தால் பாஜக இந்த கருத்தினை முன் வைப்பதாக கூறப்படுவது தவறானது. நான் உட்பட பாஜக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். ஜனநாயக உரிமை பறிக்கப்படும் போது, அதற்காக குரல் கொடுப்பது அவசியமாகும். இதில், தோல்வி பயம் எதுவும் இல்லை.

இந்தி - சனாதனத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வடக்கே பேசுவதில்லை: தற்போது பிரதமர் களத்தில் நின்று மக்களுக்காக பேசி வருகிறார். அதுவே, ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு பயணம் செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது; அவர் எங்கு இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. மேலும், திமுகவின் முன்னாள் அமைச்சர் இலாக்கா இல்லாமல் சிறையில் உள்ளார். 2 முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இதுதான் இந்தியா கூட்டணியின் நிலை. தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் வடநாட்டிற்கு சென்றால், இந்தி எதிர்ப்பு, சனாதனம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தான் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை.

விஜயகாந்திற்கு உரிய மரியாதை: திமுகவில் உதயநிதிக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் உழைக்கும் கட்சியினருக்கு கொடுக்கப்படுவதில்லை. பாஜகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் தலைவராகவும், ஆளுநராகவும் எவ்வித பாகுபாடுமின்றி ஆக முடியும். ஏன் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுக்கிறார்? தமிழ்நாட்டில் தான் மற்றொரு மொழியை கற்பதற்கு தடை உள்ளது. நீட் தேர்வை உச்சநீதிமன்றம் கொண்டு வந்தபோது, ஏன் முதல் கையெழுத்திட்டு அதை நீக்கவில்லை என்றார். மேலும், விஜயகாந்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது பிரதமரும், பாஜகவினரும் மிகுந்த அன்பு வைத்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு ஆணவக்கொலை; மாமனார், மாமியார் உட்பட 6 பேர் மீது குண்டாஸ்! - Erode Honor Killing Issue

Last Updated :Apr 24, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.