ETV Bharat / state

டெல்லி விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்ற பயணி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 4:12 PM IST

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் அவசர கால கதவை, பயணி ஒருவர் திறக்க முயன்றதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று (பிப்.13) இரவு 7 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதை அடுத்து, விமானி விமானத்தை ஓடு பாதையில் இயக்குவதற்குத் தயாரானார். அந்த நேரத்தில், திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்தால் ஒலிக்கக்கூடிய அலாரம் விமானத்துக்குள் ஒலித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தி விட்டு, அவசரகால கதவை திறந்தது யார் என்று விசாரிக்கத் தொடங்கி உள்ளர். இதை அடுத்து, பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள் அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணியிடம் சென்று விசாரித்து உள்ளானர்.

அப்போது அந்தப் பயணி, “நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். உடனே விமானத்துக்குள் அந்த அலாரம் ஒலித்து விட்டது. நான் முதல் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது” என கூறியுள்ளார்.

ஆனாலும், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அந்தப் பயணியை உடனடியாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை விமான நிலைய மேலாளருக்கு தலைமை விமானி அவசர தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, அந்தப் பயணியிடம் விசாரனை நடத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். மேலும், அவருடைய விமானப் பயணமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதன் பின்பு, அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு 158 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணியை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் பயணியை விசாரித்தபோது, அவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் சரோஸ் (27) என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், சென்னையில் வேலைக்கான நேர்முகத் தேர்விற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து ரயிலில் வந்துள்ளார்.

இப்போது அவர் விமானத்தில் டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, அந்தப் பயணி சென்னை விமான நிலைய போலீசாரிடம், தான் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூறி உள்ளார். இந்த நிலையில், விமான நிலைய போலீசார், விமான நிறுவனம் அளித்துள்ள புகாரின் பேரில் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விமானத்தில் பயணித்த பெண் பயணி திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.