ETV Bharat / state

மக்கள் சேவைக்கான அங்கீகாரமே பத்மஸ்ரீ விருது - அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் நாச்சியார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 6:15 PM IST

பத்மஸ்ரீ விருது
அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் நாச்சியார்

20 ரூபாய்க்கு மட்டுமல்ல இலவசமாகவும் கண் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அரவிந்த் கண் மருத்துவமனையின் மக்கள் பணிக்கான பரிசு இந்த பத்மஸ்ரீ விருது என அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் கோவிந்தப்பா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவைக்கான அங்கீகாரமே பத்மஸ்ரீ விருது

மதுரை: நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவா்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவையை பாராட்டி, மருத்துவமனையின் கெளரவத் தலைவா் மருத்துவா் ஜி.நாச்சியாருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மருத்துவமனையின் கெளரவத் தலைவா் ஜி.நாச்சியாா் செய்தியாளா்களிடம் பேசியதாவது, “சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனி நபருக்காக வழங்கப்பட்ட விருது இல்லை. அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் என அனைவரின் சேவைக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். ஒட்டுமொத்தமான எங்களுடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருது.

ஆரம்ப காலகட்டத்தில் 12 படுக்கைகளைக் கொண்டு கண் மருத்துவம் செய்து வந்த நிலையில், தற்போது தினமும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 5ஆயிரம் அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறோம். எங்களிடம் 450 கண் மருத்துவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 செவிலியர்கள் உள்ளனர்.

16 இடங்களுக்கு மேல் எங்களுடைய மருத்துவமனை உள்ளது. மேலும், கண்ணொளி மையம், கிராம முகாம் என பலதரப்பட்ட சேவைகளையும் செய்து வருகிறோம். 48% இலவசமாகவும், 52% பணம் பெற்றுக் கொண்டும் எங்களுடைய கண் மருத்துவமனையை செயல்படுத்தி வருகிறோம். நோயாளிகளிடம் குறைந்த அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தரமான மருத்துவத்தை வழங்குவதால் எங்களால் சிறப்பாக இயங்க முடிகிறது.

கண் சார்ந்த மருத்துவ பணி மட்டும் இல்லாமல், ஒவ்வொரு கண் மருத்துவம் சார்ந்த பொருளையும் நாங்களே தயாரித்து வழங்குகிறோம். ஆராய்ச்சி நிலையம் எங்களிடம் உள்ளதால் இதனை சேவையாக செய்ய முடிகிறது. 20 ரூபாய்க்கு கூட கிராமங்களில் மருத்துவம் செய்கிறோம். இலவசமாகவும் மருத்துவம் செய்கிறோம். அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் மருத்துவம் செய்வதால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிகிறது. மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசுதான் பத்மஸ்ரீ விருது” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் பா.ஜ.க. பூஜ்யம்” "இந்தியா கூட்டணி அமைத்தார்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள் என வரலாறு சொல்லும்" - மு.க.ஸ்டாலின்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.