திருநெல்வேலி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலின் காரணமாக அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என கடந்த நவம்பர் 30ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி சட்ட ரீதியாக பன்னீர்செல்வம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்
அந்த வகையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளத்தில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு வரவில்லை எனவும், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர் ஓபிஎஸ் உடலை பரிசோதித்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் இன்று (பிப்.08) மாலை நெல்லையிலிருந்து சென்னை புறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: 'மக்கள் பீதி அடைய வேண்டாம்'- தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறை விளக்கம்!