ETV Bharat / state

பண பலத்தால் தலைமை இடத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி: தஞ்சையில் ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 9:42 AM IST

Updated : Jan 30, 2024, 3:34 PM IST

O.Panneerselvam speech
O.Panneerselvam speech

O.Panneerselvam: எடப்பாடி கே.பழனிசாமி பதவி விலகாவிடில், அவரை தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து தூக்கி வீசிவிடுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தஞ்சாவூர்: 'அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு கூட்டம்' ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ வைத்தியலிங்கம் தலைமையில் (ஜன.29) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பதவியை கொடுத்தவர்களையே மரியாதை குறைவாகப் பேசும் ஒருவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கலாமா?

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என்ற பதவியில் இருந்து அவராகவே விலக வேண்டும். இல்லையென்றால் அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவரை தூக்கி எறியும் காலம் வெகுவிரைவில் இல்லை. துரோகத்தை மட்டும் தன் மனதில் வைத்துக் கொண்டு, இந்த இயக்கத்தை கபளீகரம் செய்கின்றார்.

இருபெரும் தலைவர்கள் 50 ஆண்டுகளாக உருவாக்கிய கோட்டைக்குள் இன்று நச்சு பாம்புகள் உட்கார்ந்து, வருபவர்களைக் கொத்துவதற்காக படம் எடுத்துள்ளது. கட்சி ஒன்று பட வேண்டும் என்று மறுக்கின்ற ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். 2016 சட்டமன்ற தேர்தலில் புரட்சித் தலைவி ஜெயலலிதா பெற்றுத் தந்த வெற்றியால்தான் இந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் ஆனவர்கள்.

இதையும் படிங்க: "வணக்கம் வணக்கம்" - பரிட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாணவிக்கு பிரதமர் பதில்!

எடப்பாடி அதிமுக தலைமை பொறுப்பு ஏற்றதில் இருந்து, தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைத்தான் பெற்றுத்தந்துள்ளார். இன்னும், பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடந்த ஈரோடு இடைத் தேர்தலிலும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைத்தது. சாதாரண தொண்டன் கூட கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்க முடியும் என்கிற நிலை இன்றைக்கு மாறிவிட்டது" எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று நடத்தி இரண்டு மாதத்திற்குள்ளாக 'ஒற்றை தலைமை' தான் வேண்டும் என அடம்பிடித்து, தன்னிடம் உள்ள பண பலத்தைக் கொண்டு செய்த சதி வேலையை எதிர்த்து தான் இந்த தர்மயுத்தம்.

எடப்பாடி இல்லாத அதிமுக, டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்து இருக்கிற அனைவரும் இணைந்து தேர்தல் களத்தில் நின்றால், வெல்வதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்" - அமைச்சர் ரகுபதி!

Last Updated :Jan 30, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.