ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது; இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 2:02 PM IST

Tamil Nadu Fishermens Arrest
மீன் பிடிக்கச் சென்ற 19 தமிழக மீனவர்கள் கைது

Tamil Nadu Fishermens Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கோரி, 2 படகுகளுடன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்: தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கோரி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கைது நடவடிக்கைகளை தடுக்கவும் மத்திய மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நடப்பாண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட மீனவர்கல் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 2 படகுகளையும், அதிலிருந்து 19 தமிழக மீனவர்களையும் (ஒரு படகில் 7 மீனவர்கள், மற்றொரு படகில் 12 மீனவர்கள்) எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட 19 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் தான், கடந்த ஜனவரி 22ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களை கைது செய்த இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒதிஷாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மேலும் 19 மீனவர்களை சிங்களப்படை கைது செய்திருப்பதை இயல்பான ஒன்றாக கருத முடியாது. தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தான் அவர்களை சிங்களக் கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பலநூறு முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால் எந்த பயனும் ஏற்படாது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன்? என்று வினா எழுப்பியிருந்தது. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விழுப்புரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து; இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.