ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 6:13 PM IST

Kodanad Murder And Robbery Case
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு

Kodanad Murder And Robbery Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் சாட்சிகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (மார்ச் 08) நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், எதிர்த் தரப்பு வழக்கறிஞர் விஜயன், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியோரும் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வரும் விசாரணையின் தன்மையைக் குறித்துக் கேட்டறிந்த நீதிபதி கூடுதல் சாட்சிகள் இடையே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் தற்போதைய விசாரணைக்கான விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்திருந்த மனு குறித்து அரசு தரப்பில் பதில் கூறும் போது நீதிபதி வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

மேலும், வழக்கின் புலன் விசாரணையில் மற்றவர்கள் தலையிடுவதால் விசாரணை பாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது, இதனைக் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் என்றும் நேற்று கோடநாடு பங்களாவில் சிபிசிஐடி மற்றும் தடவியல் நிபுணர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தது குறித்த எவ்வித அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும்" அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற பங்களாவில் நேற்று (மார்ச் 07) சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் மூன்று துணை கண்காணிப்பாளர்கள், தடயவியல் நிபுணர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் உள்ள அறைகள் மற்றும் கொலை சம்பவம் நடைபெற்ற நுழைவு வாயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பாத்ரூமில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம்.. யார் அந்த கடத்தல் குருவி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.