ETV Bharat / state

பணி நிரந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம் - போலீசார் கைது நடவடிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 8:30 PM IST

Mrb contract nurses protest
எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம்

Mrb contract nurses: தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சுமார் 10,000 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வு மூலம் முறையாக பணியமர்த்தப்பட்டு 4 முதல் 8 வருடங்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர். பணியில் இணையும் போது இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இன்று வரை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்று வரை அதை நிறைவேற்றவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

கரோனா காலக் கட்டத்தில் சிகிச்சை வழங்க போட்டி தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் சுமார் 2,500 பேர் இரண்டரை ஆண்டுகள் பணி முடித்த பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை மற்றும் மகப்பேறு சேவை வழங்கும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற அவசர மற்றும் அத்தியாவசிய விடுப்புகளும் மறுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 17,000 நிரந்தர பணியிடங்களும் 13,000 தொகுப்பூதிய பணியிடங்களும் உள்ள நிலையில், 40 சதவீதத்திற்கு மேல் நிரந்தர தன்மையற்ற தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களாகவே உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1,400 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.

மீதமுள்ள சுமார் 8,500 செவிலியர்கள் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் தொகுப்பூதிய முறையில் பணி செய்கின்றனர். 1370 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நிரந்தர செவிலியர் பணியிடம் கூட இல்லை. கடந்த 2023 அக்டேபார் மாதம் அன்று சென்னை DMS அலுவலகத்தில் நடத்திய முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலியர்களின் கோரிக்கைகள் நியாயமானது எனவும், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால் அது இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு வருகைத் தந்த எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை ஜாமினில் எடுத்தவர்! யார் இந்த ஃபாலி எஸ் நாரிமன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.